search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் பயணிகள் வசதிக்காக மேலும் 4 நுழைவுப்பாதைகள்
    X

    சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் பயணிகள் வசதிக்காக மேலும் 4 நுழைவுப்பாதைகள்

    சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக மேலும் 4 நுழைவுப்பாதைகள் திறக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. #MetroTrain

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

    கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்- சென்ட்ரல், சைதாப்பேட்டை- டி.எம்.எஸ். வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.

    பயணிகள், பொதுமக்கள் இடையே மெட்ரோ ரெயில் சேவைக்கு பெரிதும் வரவேற்பு ஏற்பட்டதையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

    சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்துக்கு நேரடி மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு செல்ல தற்போது ஒரு நுழைவுப்பாதை மட்டுமே உள்ளது.

    இதன் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் சென்று வருகிறார்கள். இதனால் பயணிகளுக்கு கூடுதல் நேரம் விரயம் ஏற்படுவதால் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிர்வாகத்துக்கு பல்வேறு புகார்களை பயணிகள் தெரிவித்து வந்தனர். கூடுதலாக நுழைவுப் பாதைகள் திறக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

    சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக மேலும் 4 நுழைவுப்பாதைகள் திறக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்ட்ரல் மெட்ரோ சுரங்க ரெயில் நிலையம் பூமிக்கடியில் 3 அடுக்கு வசதிகளுடன் பிரமாண்டமாக 70 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு பயணிகளுக்காக பல்வேறு சிறப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகிறது.

    தற்போது சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஒரு நுழைவுப்பாதை மட்டுமே பயணிகளுக்காக திறக்கப்பட்டு உள்ளது.

    மேலும் பயணிகள் வசதிக்காக கூடுதலாக 4 சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மூர்மார்க்கெட் வளாகம், சென்ட்ரல் ரெயில் நிலையம், பூங்கா நிலையம், பார்க் டவுன் நிலையம் உள்பட 4 இடங்களில் நுழைவுப் பாதைகள் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

    இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிவடைந்து பயணிகள் வசதிக்காக திறக்கப்படும். பயணிகள் பொதுமக்கள் எளிதில் சுரங்க மெட்ரோ ரெயில் நிலையத்துக்குள் சென்று வர முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MetroTrain

    Next Story
    ×