search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இளம்பெண்ணிடம் செல்போனை பறித்து ஓடிய வாலிபர்: பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
    X

    இளம்பெண்ணிடம் செல்போனை பறித்து ஓடிய வாலிபர்: பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

    எல்லீஸ் நகர் மேம்பாலத்தில் இளம்பெண்ணிடம் செல்போனை பறித்து ஓடிய வாலிபர் பொதுமக்கள் விரட்டிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

    மதுரை:

    மதுரையில் இதய பகுதியான பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள எல்லீஸ்நகர் ரெயில்வே மேம்பாலத்தில் எப்போதும் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

    அதுபோல வழிப்பறி சம்பவங்களும் இங்கு அதிகம் நடந்து வருகிறது. போலீசார் அடிக்கடி ரோந்து வந்தாலும் மர்ம நபர்களின் வழிப்பறி அட்டகாசம் குறைந்தபாடில்லை.

    இன்று காலை திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த மோகனா என்ற இளம்பெண் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து எல்லீஸ் நகர் மேம்பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் கையில் வைத்திருந்த செல்போனை மர்ம நபர் பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.

    அந்த இளம்பெண் கூச்சல் போட்டதால் பொதுமக்கள் வழிப்பறி ஆசாமியை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர். திண்டுக்கல் ரோடு வரை விரட்டிச் சென்று அந்த ஆசாமியை பிடித்த பொதுமக்கள் திடீர்நகர் போலீசில் ஒப்படைத்தனர்.

    சுமார் 23 வயது மதிக்கத்தக்க அந்த வழிப்பறி ஆசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இளம்பெண்ணிடம் பறித்த செல்போனையும் மீட்டனர்.

    மர்மநபரை கைது செய்த போலீசார் இவருக்கு வேறு வழிப்பறி சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள எல்லீஸ்நகர் மேம்பாலத்தில் நடந்த இந்த செல்போன் பறிப்பு சம்பவத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×