search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெட்ரோ பயணிகள் எண்ணிக்கை இருமடங்கு உயர்ந்தது
    X

    மெட்ரோ பயணிகள் எண்ணிக்கை இருமடங்கு உயர்ந்தது

    மெட்ரோ ரெயில் பயணிகள் எண்ணிக்கை நெரிசல் நேரங்களில் இருமடங்கு அதிகரித்து உள்ளது. விமான நிலையத்துக்கு அதிகமானோர் பயணம் செய்து வருகின்றனர். #MetroTrain #ChennaiMetro
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

    கோயம்பேடு - ஆலந்தூர், சின்னமலை - விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம் - சென்ட்ரல், சைதாப்பேட்டை - டி.எம்.எஸ். வரை சுரங்கப் பாதையிலும் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை நடந்து வருகிறது.

    பயணிகள், பொது மக்களிடையே வரவேற்பு ஏற்பட்டதையொட்டி மெட்ரோ ரெயில் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.

    நெரிசல் நேரங்களில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை கடந்த 2 வாரங்களாக இருமடங்கு அதிகரித்து உள்ளது.

    மேலும் புதிய 6 சுரங்க ரெயில் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதையொட்டி பயணிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தற்போது 26 ரெயில் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    விமான நிலையத்துக்கு மெட்ரோ ரெயிலில் செல்வோர் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. மெட்ரோ ரெயிலில் அனைத்து வழித்தடங்களிலும் சராசரியாக 80 சதவீதம் பயணிகள் கூடுதலாக பயணம் செய்து வருகிறார்கள்.

    மெட்ரோ ரெயிலில் தினமும் 55 ஆயிரம் பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். நெரிசல் நேரங்களான காலை 8 மணி முதல் 10 மணி வரைக்கும் மாலை 5 மணி முதல் 8.30 மணி வரைக்கும் விமான நிலையம், திருமங்கலம், வடபழனி, கோயம்பேடு, சென்ட்ரல், ஆலந்தூர் ரெயில் நிலையங்களில் சராசரியாக பயணிகள் எண்ணிக்கை இருமடங்கு அதிகரித்துள்ளது. நெரிசல் நேரங்களில் கூடுதலாக 5 மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-


    தற்போது 35 கிலோ மீட்டர் தூரத்துக்கு தயாரான மெட்ரோ ரெயிலில் தினமும் 5 லட்சம் பேர் பயணம் செய்ய வைப்பது மெட்ரோ ரெயில் திட்டத்தின் இலக்கு ஆகும். முதல்கட்ட திட்ட பணியில் 45 கிலோ மீட்டர் தூர வழித்தட பணிகள் நிறைவடைந்ததும் 7.76 லட்சம் பயணிகள் பயணம் செய்வார்கள்.

    விமான நிலையத்துக்கு எளிதில் செல்ல விமான பயணிகள் பெரும்பாலானோர் மாலை நேரங்களில் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வதை விரும்புகிறார்கள்.

    மாலை நேரங்களில் உள் நாடு, வெளிநாடுகளுக்கு அதிகப்படியான விமானங்கள் சென்று வருகின்றன. விமான பயணிகளுக்கு விமானங்களை பிடிக்க மெட்ரோ ரெயில் பயணம் எளிதாக அமைகின்றது.

    விமான நிலையத்துக்கு நேரடியாக விமான பயணிகள் செல்ல மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ‘வால்கலேட்டர்’ (நடைபாதை) பெரிதும் பயன்படுகிறது.

    மெட்ரோ ரெயில் சேவையை கல்லூரி, அலுவலகம் செல்வோருக்கு நெரிசல் நேரங்களில் பெரிதும் பயன்படுத்தி வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #MetroTrain #ChennaiMetro
    Next Story
    ×