search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்டத்துக்கு ஆதரவு - அன்புமணி ராமதாஸ்
    X

    அரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்டத்துக்கு ஆதரவு - அன்புமணி ராமதாஸ்

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்திற்கு பா.ம.க. முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். #TeacherStruggle #AnbumaniRamadoss

    சென்னை:

    பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு அடுத்தக்கட்டமாக நாளை மறுநாள் முதல் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை அறிவித்துள்ளது.

    அரசு ஊழியர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தினால், அவர்களை அழைத்து பேச்சு நடத்தி கோரிக்கைகளை நிறை வேற்றுவதும், நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளாக இருந்தால் அவை குறித்து அரசு ஊழியர் சங்கத்தினரிடம் விளக்கி சமரசம் செய்வது தான் வழக்கமாகும்.

    ஆனால், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பினாமி அரசு, அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் பேச்சு நடத்துவதற்கு பதிலாக அவர்கள் மீது அடக்கு முறையை கட்ட விழ்த்து விடும் அணுகு முறையை கடைபிடித்து வருகிறது.

     


    பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல் படுத்த வேண்டும்; ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்; தொகுப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்; அரசு பணியிடங்களை குறைப்பது குறித்து பரிந்துரைப் பதற்கான குழுவை கலைப்பதுடன், அரசு பள்ளிகளை மூடும் முடிவை கைவிட வேண்டும் ஆகிய 5 கோரிக்கைகளை முன்வைத்து தான் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பு போராடி வருகிறது. இந்த கோரிக்கைகள் அனைத்தும் மிகவும் நியாய மானவையாகும்.

    ஆனால், இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றும் எண்ணம் தமிழக அரசுக்கு கொஞ்சமும் இல்லை. மாறாக பொய்யான வாக்குறுதிகளை அளித்து அரசு ஊழியர்களை ஏமாற்றும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. உதாரணமாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 15 ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது. கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்தார்.

    எனினும், ஐந்தாண்டு ஆட்சியில் அத்திட்டத்தை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காத ஜெயலலிதா, 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில வாரங்கள் முன்பாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிந்துரைக்க சாந்தா ஷீலா நாயர் தலைமையில் குழு அமைத்தார். 6 மாதங்களில் அக்குழு அறிக்கை தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், 30 மாதங்களாகியும் அந்தக் குழு அறிக்கை தாக்கல் செய்யவில்லை.

    அரசு ஊழியர்களை அழைத்து தமிழக அரசு பேசியிருக்க வேண்டும். ஆனால், சர்வாதிகார மனப்போக்குடன் தமிழக அரசு நடந்து கொள்வதால் தான் அதைக் கண்டித்து, நாளை மறுநாள் முதல் சென்னையில் சங்க நிர்வாகிகள் காலவரையற்ற உண்ணாநிலையும், மாவட்டத் தலைநகரங்களில் மாலைநேர ஆர்ப்பாட்டமும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் இந்தப் போராட்டத்திற்கு பா.ம.க. முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. அரசு ஊழியர்களின் போராட்டம் தொடங்குவதற்கு முன்பாக அவர்களை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை தவிர்க்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #TeacherStruggle #AnbumaniRamadoss

    Next Story
    ×