search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழனி ரவுடி கொலையில் அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது
    X

    பழனி ரவுடி கொலையில் அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது

    பழனியில் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் வழக்கு பதிவு செய்து அண்ணன்-தம்பி உள்பட 3 பேரை கைது செய்தனர்.
    பழனி:

    பழனி பாரதிநகரைச் சேர்ந்த காளிமுத்துமகன் செந்தில்குமார் (வயது 38). நேற்று அடிவாரம் பகுதியில் தனது நண்பர்களுடன் ஒரு பாரில் மது குடிக்க சென்ற போது தகராறு ஏற்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக பழனி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து பூபாலன், அவரது அண்ணன் கோபிநாத் துர்க்கா, சவுந்தரபாண்டி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இது தொடர்பாக பூபாலனின் தம்பி பாலன் என்பவரை தேடி வருகின்றனர்.

    இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், செந்தில்குமாரின் தம்பி பாரதிமோகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக கடந்த 2013-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது பழனி அடிவாரத்தில் ஆட்டோ டிரைவர்கள் உதயகுமார், பாலாஜி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். அவர்கள் கொலை செய்யப்பட்ட அதே இடத்தில்தான் தற்போது செந்தில்குமாரும் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆட்டோ டிரைவர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் செந்தில்குமார் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

    தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த அவரை வெளியூரில் சென்று வசிக்குமாறு அவரது தாய் சாவித்திரி கூறினார். அதன் பேரில் தனது மனைவி திவ்யா (வயது 34), மகன் கருப்பணபாரதி (4) ஆகியோருடன் திண்டுக்கல்லில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் தனது மகனுக்கு பிறந்தநாள் என்பதால் அவனை தாயிடம் அழைத்து வந்துள்ளார்.

    அதன் பிறகு நேற்று நண்பர்களுடன் சேர்ந்து மது குடிக்க செல்லும் போது தகராறு ஏற்பட்டு கொலை நடந்துள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள 3 பேருக்கும் செந்தில்குமாருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது. அதன் காரணமாகத்தான் இந்த கொலை நடந்துள்ளது. தற்போது பூபாலனின் தம்பியை தேடி வருகிறோம் என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×