search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் அதிகாரி அறிவிப்புக்கு தூத்துக்குடி மக்கள் கண்டனம்- போராட்டம் தீவிரமாகும் என எச்சரிக்கை
    X

    ஸ்டெர்லைட் அதிகாரி அறிவிப்புக்கு தூத்துக்குடி மக்கள் கண்டனம்- போராட்டம் தீவிரமாகும் என எச்சரிக்கை

    அடுத்த ஓரிரு மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்ற அதிகாரியின் அறிவிப்பு தூத்துக்குடி மக்கள் மத்தியில் மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. #SterlitePlant #ThoothukudiFiring
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்ட பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். இதனால் தூத்துக்குடியில் பதட்டமும், பரபரப்பும் உண்டானது.

    துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு உலக அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை கொண்டு விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது. துப்பாக்கி சூடு தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம் ஆகியவை நேரடியாக தூத்துக்குடி வந்து விசாரணை மேற்கொண்டன.

    இதே போல நீதிபதிகள் அடங்கிய உண்மை கண்டறியும் குழுவும் தூத்துக்குடியில் முகாமிட்டு விசாரணை நடத்தின. இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலை மூடுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. முதல் கட்டமாக ஆலைக்கு மின்சாரம் வழங்குவது மற்றும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டன.

    இதன் பிறகு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து ஆலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை செயல் அதிகாரி ராம்நாத் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘அடுத்த ஓரிரு மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன’ என தெரிவித்தார்.

    இது தூத்துக்குடி மக்கள் மத்தியில் மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி அ.குமரெட்டியாபுரத்தை சேர்ந்த மகேஷ் என்பவர் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவோம் என்று அந்த நிறுவன அதிகாரி கூறியிருப்பது எங்களுக்கு மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த பிரச்சனையில் 13 பேரை இழந்து விட்டோம். நல்ல காற்று, குடிநீர் கிடைக்கவில்லை.

    ஸ்டெர்லைட் ஆலையால் படும் துன்பம் சொல்லி மாளாத நிலையில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்து ஆலையை மூடியுள்ளது. எனினும் இதுபற்றி சட்டமன்றத்தை கூட்டி ஸ்டெர்லைட்டை மூடுவதற்கான அரசாணை குறித்த தீர்மானம் நிறைவேற்றி ஆலையை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். அப்போது தான் இதற்கு நிரந்தர தீர்வு காண முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அ.குமரெட்டியாபுரத்தை சேர்ந்த மகாலட்சுமி கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலையினால் புற்றுநோய் ஏற்பட்டு பலர் இறந்து விட்டார்கள். குடிநீர் மாசுபட்டு உள்ளது. ஏற்கனவே இந்த ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் இறந்து விட்டார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து கை, கால்கள் முடமாகி உள்ளனர். தூத்துக்குடி நகர் முழுவதுமே பதட்டமான நிலையில் காணப்படுகிறது.

    தமிழ் மாந்தன், மகேஷ்

    இந்த சூழ்நிலையில் மீண்டும் ஆலையை திறப்போம் என ஆலை நிர்வாகம் கூறியிருப்பது எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதற்கு முழுமையான தீர்வை காணவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் தூத்துக்குடி மக்கள் மீண்டும் போராட்டத்தை தீவிரப்படுத்தும் சூழ்நிலை ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தமிழ் மாந்தன் கூறியதாவது:-

    துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்த வேதனை இன்னும் தீரவில்லை. கொந்தளிப்பு அடங்கவில்லை. மக்கள் மனதில் இன்னமும் அமைதி திரும்பவில்லை. இந்த சூழ்நிலையில் ஆலை மீண்டும் திறக்கப்படும் என அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது சாத்தியமல்ல என கூறியிருந்தார். அனில் அகர்வால் கோர்ட்டு உத்தரவு பெற்று திறப்போம் என தெரிவித்தார்.

    இதைவைத்து பார்க்கும் போது ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளிடையே உடன்பாடு இருப்பது போல் தெரிகிறது. தற்போது ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது பூட்டு போடும் விழா போல நடந்துள்ளது.

    எனவே சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #SterlitePlant #ThoothukudiFiring
    Next Story
    ×