search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி மாணவ, மாணவிகள் சுற்றுச்சூழல் தூதுவர்களாக செயல்பட வேண்டும்: கலெக்டர் ஆசியா மரியம்
    X

    பள்ளி மாணவ, மாணவிகள் சுற்றுச்சூழல் தூதுவர்களாக செயல்பட வேண்டும்: கலெக்டர் ஆசியா மரியம்

    பள்ளி மாணவ, மாணவிகள் சுற்றுச்சூழல் தூதுவர்களாக செயல்பட வேண்டும் என கலெக்டர் ஆசியா மரியம் கூறினார்.
    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள எர்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினவிழா நேற்று கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்றது. விழாவில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

    பிளாஸ்டிக் பொருட்கள் எளிதில் மக்காது. பிளாஸ்டிக் பைகள் தரையில் வீணாக கிடந்து, பெய்யும் மழை நீரை மண்ணுக்குள் செல்லாமல் தடுக்கின்றது. இதனால் மழைநீர் மண்ணுக்குள் இறங்காமல் ஓடி வீணாகின்றது. தற்போது அனைத்து தேவைகளுக்கும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் நிலை உள்ளது. இது தவறானதாகும். பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, அனைத்து தேவைகளுக்கும் துணிப்பைகளை பயன்படுத்த முடியும்.

    பள்ளி மாணவ, மாணவிகள் சுற்றுச்சூழல் தூதுவர்களாக செயல்பட்டு தங்கள் பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் துணிப்பைகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் வருங்காலத்தில் தூய்மையான காற்று மற்றும் சுற்றுச்சூழல் கிடைக்கும்.

    மரங்கள் கார்பன்-டை-ஆக்சைடை உள்வாங்கி நமக்கு தேவையான ஆக்சிஜனை வெளியிடுகின்றன. மரங்கள் அழிந்தால் மனித இனமும் மற்றும் விலங்கினங்களும் சுவாசிக்க ஆக்சிஜன் இன்றி மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக நேரிடும். பூமி வெப்பமயமாகி மழை பெய்யாத நிலை ஏற்படும்.

    எனவே சுற்றுச்சூழலை மேம்படுத்த மாணவ, மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். மாணவ, மாணவிகள் தாங்கள் வைக்கும் மரங்களுக்கு மட்டுமல்லாமல், மற்றவர்கள் வைத்த மரங்களுக்்கும் நீர் ஊற்றி வளர்க்க வேண்டும். தான் வைத்த மரக்கன்றானது சில ஆண்டுகளுக்கு பிறகு, மரமாக வளர்ந்து நிற்பதை பார்க்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியானது எதனுடனும் ஒப்பிட முடியாததாகும். இந்த ஆர்வத்தை மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு கதைகள் மற்றும் நிகழ்வுகள் மூலமாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரவேண்டும்.

    நமது வீடுகளில் கட்டிடம் கட்டுவதற்காக மரங்களை வெட்ட வேண்டிய நிலை ஏற்பட்டால், மரங்களை வெட்டாமல் வீடுகட்டும் முயற்சியை மேற்கொள்ள மாணவ, மாணவிகள் பெற்றோரை வற்புறுத்த வேண்டும். மேலும் வீடுகளில் துளசி செடி உள்ளிட்ட ஆக்சிஜன் அதிகம் வழங்க கூடிய, செடி வகைகளையும் வளர்த்து வீட்டில் பசுமை சூழலை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அவர் பள்ளி வளாகத்தில் பல்வேறு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    மேலும் அவர் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகளுக்கு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளையும், ஆக்சிஜன் அதிகம் வெளியிடும் துளசி செடிகளையும் வழங்கினார். உலக சுற்றுச்சூழல் தின விழாவையொட்டி பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பாரம்பரிய விதை நெல் கண்காட்சியினையும், பிளாஸ்டிக் கழிவுகளால் மாணவ, மாணவிகளால் படைக்கப்பட்டிருந்த படைப்புகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட கல்வி அலுவலர் அருளரங்கன், பள்ளி தலைமையாசிரியர் மேனகா உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×