search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் தமிழகத்தில் அமல்
    X

    பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் தமிழகத்தில் அமல்

    தமிழகம் முழுவதும் மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கவோ, பயன்படுத்தவோ அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தடை விதிக்கப்படுவதாக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். #PlaticBan #EnvironmentDay
    சென்னை:

    சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி 110-விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினம். சமுதாயம் நலமாக வாழவும், வளமுள்ள நாடு உருவாகவும் இன்றியமையாததாக விளங்குவது சுற்றுச்சூழல்.

    மறைந்த ஜெயலலிதா, பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படும் சுகாதாரம் மற்றும் சுற்றுச் சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்யும் வல்லுனர் குழு என்ற சிறப்பு குழுவினை அமைத்தார்.

    இந்த வல்லுனர் குழு, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் குவளைகள் போன்ற பொருட்களை தடை செய்யவும், பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் வாழை இலைகள், பாக்குமட்டை தட்டுகள், தாமரை இலைகள் போன்றவற்றின் பயன்பாட்டினை ஊக்குவிக்கவும் ஆலோசனை வழங்கியது.

    இவற்றில், அன்றாடம் மக்களுக்கு தேவைப்படும் பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களுக்கான உறைகள் போன்ற பொருட்களுக்கான பிளாஸ்டிக் உறைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்க பரிந்துரைத்துள்ளது.

    ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், நிலங்களில் தேங்கிவிடும் போது, நீர்நிலைகளை நோக்கிச் செல்லும் நீரின் போக்கு மாறி, நீர் தேங்கி விடும் நிலை உருவாகிறது.

    மேலும், கழிவுநீர் செல்லும் பாதைகளிலும் இதன் பாதிப்புகள் அதிக அளவில் உள்ளது. இதனால் தண்ணீர் மாசடைகிறது. மேலும் மழைநீர், பூமியில் கசிந்து நிலத்தடியினை அடையாமல் போவதால், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதும் பாதிக்கப்படுகிறது.

    இவை எல்லாவற்றிற்கும் மேலாக, தேங்கி இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளில் மழைநீர் தேங்கும் போது, கொசு உற்பத்தியாகி, அதன் மூலம் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவுகின்றன. மேலும், மழைநீர் கால்வாய்களில் அடைப்புகள் ஏற்பட்டு, வெள்ளப்பெருக்கு ஏற்படவும் காரணமாகிவிடுகிறது. மண் வளமும் பாதிக்கப்படுகிறது.

    தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படும்போது, அதன் மூலம் வெளியாகும் நச்சு வாயுவின் மூலமாக மனிதன் மற்றும் உயிரினங்கள் சுவாசிக்கும் காற்றும் மாசடைகிறது. உணவு பொருட்களுடன் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் பிற உணவுகளுடன் சேர்ந்து உண்ணும் நிலை ஏற்படுவதனால், கால்நடைகள் மற்றும் வன விலங்குகளின் உயிரிழப்புக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் காரணமாகி விடுகிறது.

    மேலும், பிளாஸ்டிக் பொருட்கள், பல ஆண்டுகள் ஆனாலும் மக்காத தன்மை உடையதால், அவற்றை அழிப்பதோ, ஒழிப்பதோ இயலாத காரியம். இவ்வாறு நிலம், நீர், காற்று போன்ற பல்வேறு நிலையில் மாசு ஏற்பட்டு, மனித உயிருக்கும், சுகாதாரத்திற்கும் பிளாஸ்டிக் பொருட் கள் பெரும் தீங்கு விளைவிக்க காரணமாகி விடுகிறது. எனவே இவற்றை அறவே தவிர்ப்பது இன்றைய சூழ்நிலையில் கட்டாயமாகிறது.

    மேற்படி பாதிப்புகளை கருத்தில் கொண்டும், இந்தத் தீங்கினை நம் எதிர்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச்செல்லக்கூடாது என்ற உயரிய நோக்கத்திலும், தமிழ்நாட்டில் 2019-ம் ஆண்டு, ஜனவரி 1 முதல் பால், தயிர், எண்ணெய், மருத்துவ பொருட்களுக்கான உறைகள் தவிர, தடிமன் வேறுபாடின்றி, இதர மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ் டிக் தட்டுகள், பிளாஸ்டிக் தேநீர், தண்ணீர்க் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல் மற்றும் பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்ட பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986-ன் கீழ் தடை செய்ய இந்த அரசு முடிவு செய்து, தமிழ்நாடு முழுவதும் தடை செய்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பொதுமக்களும், வியாபாரிகளும் மேற்படி பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, துணிப்பைகள், காகித உறைகள் போன்ற மக்கும் பொருட்களை பயன்படுத்த பழகிக்கொள்ள ஏதுவாக, மேற்படி தடைகளை உடனடியாக அமல்படுத்தாமல், 2019, ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் அமல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

    ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டமான மழைநீர் சேகரிப்புத்திட்டம் பொதுமக்களின் ஒத்துழைப்போடும், பங்களிப்போடும், வெற்றிகரமாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு, நிலத்தடி நீர் பெரிய அளவில் செறிவூட்டப்பட்டது. அதே போன்று, உலக சுற்றுச்சூழல் தினத்தில் அனைவரின் ஒத்துழைப்போடும், பங்களிப்போடும், பிளாஸ்டிக் இல்லாத தமிழ்நாட்டை நம் எதிர்கால சந்ததியினருக்கு பரிசளிப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார். 
    Next Story
    ×