search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலை வேண்டுமா? வேண்டாமா? - பொது வாக்கெடுப்பு நடத்த எதிர்ப்பு இயக்கம் வலியுறுத்தல்
    X

    ஸ்டெர்லைட் ஆலை வேண்டுமா? வேண்டாமா? - பொது வாக்கெடுப்பு நடத்த எதிர்ப்பு இயக்கம் வலியுறுத்தல்

    ஸ்டெர்லைட் ஆலை வேண்டுமா?, வேண்டாமா? என்பது குறித்து தூத்துக்குடி மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் வலியுறுத்தி உள்ளது. #SterliteProtest #Thoothukudi
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாந்தன் நேற்று மாலை தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் கடந்த 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை அரசு திட்டமிட்டு நடத்தி உள்ளது. இதற்காகவே தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டு உள்ளது. இந்த தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும். பதற்றமான சூழல் என்று பல இடங்களில் போலீசாரை நிறுத்தி வைத்து மக்களை துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும்.

    துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரிப்பதற்காக தமிழக அரசு, ஒரு நபர் கமிஷன் என்ற பெயரில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமனத்தை திரும்ப பெற வேண்டும். அதற்கு மாற்றாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் சந்துரு, பரந்தாமன் ஆகியோரில் ஒருவரை நியமித்து விசாரணை நடத்த வேண்டும்.

    துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதற்கு மாற்றாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் இறந்தவர்களின் லட்சியமான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிவிட்டு, இறந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

    இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு காரணமான தமிழக அரசு ஆட்சி பொறுப்பில் இருந்து விலக வேண்டும். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது கொலை குற்றத்திற்கான சதித்திட்டம் தீட்டியதாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.


    ஸ்டெர்லைட் ஆலைக்கு குடிநீர் வினியோகம், மின்சாரம் துண்டிக்கப்படும் என்றும் ஸ்டெர்லைட் ஆலையை இயங்கவில்லை என்றும் தமிழக அரசு அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். மறுபக்கம் மக்களின் விருப்பத்தோடு ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து நடத்த விரும்புகிறோம். நீதிமன்றத்தில் இருந்தும், தமிழக அரசிடம் இருந்தும் அனுமதி கிடைத்தவுடன் மீண்டும் ஆலையை தொடங்குவோம் என்று வேதாந்தா நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர்.

    எனவே அரசும், ஆலை நிர்வாகமும் மக்களின் விருப்பம் என்னவென்று அறிய வேண்டும். அதாவது ஆலை தொடர்ந்து இயங்க வேண்டுமா?, மூடப்பட வேண்டுமா? என்பது குறித்து தூத்துக்குடி மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

    கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. அதற்கு பதிலாக ஒட்டுமொத்த தூத்துக்குடி மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #SterliteProtest #Thoothukudi #Tuticorin
    Next Story
    ×