search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துப்பாக்கி சூட்டில் பலியான 7 பேரின் உடல்கள் இன்று பிரேத பரிசோதனை
    X

    துப்பாக்கி சூட்டில் பலியான 7 பேரின் உடல்கள் இன்று பிரேத பரிசோதனை

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் பலியான 7 பேரின் உடல்கள் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக போராட்டக்குழுவினர் அறிவித்ததையடுத்து கடந்த 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசாரிடையே மோதல் ஏற்பட்டதால் தூத்துக்குடியில் 21-ந் தேதி கலவரம் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தப்பட்டது.

    இந்த சம்பவங்களில் 10 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர். துப்பாக்கி சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்ற 3 பேர் பலியானதையடுத்து சாவு எண்ணிக்கை 13-ஆக உயர்ந்தது. இதனால் தூத்துக்குடியில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவியது. தூத்துக்குடி நகரில் ஆங்காங்கே தீவைப்பு மற்றும் மோதல் நடந்தபடியே இருந்தன. இதனால் 144 தடை உத்தரவு 25-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இயல்புநிலை திரும்ப பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் நேற்று வரை வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இதனால் 144 தடை உத்தரவை நாளை மறுநாள் (27-ந் தேதி) காலை 8 மணி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டிருந்தது.

    இதன்படி 5 மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், ஊர்வலம் செல்வதற்கும், பொதுக்கூட்டம் நடத்துவதற்கும், சைக்கிள் மற்றும் வாகனங்களில் பேரணியாக செல்வதற்கும், அரிவாள், கம்பு உள்பட அபாயகரமான பொருட்களை கொண்டு செல்வதற்கும், சாதி கொடிக்கம்புகள் கொண்டு செல்வதற்கும், வாடகை வாகனங்கள் மூலம் ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்களை அழைத்து செல்வதற்கும் 144 பிரிவின் கீழ் தடை விதிக்கப்படுகிறது.

    இந்த தடை உத்தரவு பள்ளி-கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. #SterliteProtest
    Next Story
    ×