search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாத்தான்குளம் அருகே கட்டிட தொழிலாளி கொலை: வாலிபர் கைது
    X

    சாத்தான்குளம் அருகே கட்டிட தொழிலாளி கொலை: வாலிபர் கைது

    கட்டிட தொழிலாளி கொலையில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பணத்தை கொடுக்காமல் ஏளனம் பேசியதால் கட்டிட தொழிலாளியை கொலை செய்தேன் என்றார்.

    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பள்ளங்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 45). இவர் சென்னையில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு கலா என்ற மனைவியும், 17 வயதில் ஒரு மகனும் உள்ளனர். செந்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அவர், அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான லிங்கதுரையிடம் (50) ரூ.1,000 கடன் வாங்கியதாகவும், பின்னர் செந்தில் கடனை திருப்பி கொடுக்காமல், காலம் தாழ்த்தியதாகவும் கூறப்படுகிறது.

    கடந்த 18-ந்தேதி செந்தில், பக்கத்து ஊரான சின்னமாடன்குடியிருப்பு பகுதியில் உள்ள தன்னுடைய உறவினரின் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து இரவில் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். பேய்க்குளத்தை அடுத்த பழனியப்பபுரம் பகுதியில் வந்த‌போது லிங்கதுரை மற்றும் அவருடைய உறவினரான ஜெகன் ஆகிய 2 பேரும் சேர்ந்து, செந்திலை வழிமறித்து கடனை திருப்பி தருமாறு கூறினர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

    அப்போது ஆத்திரம் அடைந்த லிங்கதுரை, ஜெகன் ஆகியோர் உருட்டுக் கட்டையால் செந்திலை சரமாரியாக அடித்து கொலை செய்தனர். இதுபற்றி சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய கொலையாளிகள் லிங்கதுரை, ஜெகன் ஆகிய 2 பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் பல்வேறு இடங்களுக்கு சென்று கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் அங்குள்ள‌ காட்டுக்குள் பதுங்கி இருந்த லிங்கதுரையை போலீசார் நேற்று கைது செய்தனர். கைதான லிங்கதுரை போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், “செந்தில் தன்னிடம் வாங்கிய பணத்தை கொடுக்காமல் ஏளனம் பேசிவந்தார். அதனால் அவரை அடித்து கொலை செய்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×