search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ கலந்தாய்விற்கு 19 பேர் மட்டுமே வந்தனர்
    X

    மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ கலந்தாய்விற்கு 19 பேர் மட்டுமே வந்தனர்

    மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பட்டமேற்படிப்புக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. 39 இடங்களுக்கு நடந்த கலந்தாய்வில் 19 பேர் மட்டுமே கலந்துகொண்டனர்.
    சென்னை:

    மருத்துவ பட்ட மேற்படிப்புக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

    இந்த கலந்தாய்வுக்கு தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 39 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 23 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 4 பேர் அகில இந்திய ஒதுக் கீட்டு இடங்களை தேர்ந்து எடுத்தனர். இவ்வாறு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை எடுத்தவர்கள் இந்த கலந்தாய்வுக்கு வரக்கூடாது.

    அதன் படி மீதம் உள்ள 19 பேர் மட்டுமே வந்தனர். அவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது. 19 பேர்களில் 14 பேர் மட்டுமே இடங்களை தேர்ந்து எடுத்தனர். 5 பேர் எந்த இடமும் எடுக்கவில்லை.

    மாற்றுத்திறனாளிகளுக்கான இடங்களில் நிரம்பாத இடங்கள் பொதுகலந்தாய்வுக்கு சென்றுவிடும். பொது கலந்தாய்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை)நடத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவகல்லூரிகளில் 15 மருத்துவ கல்லூரிகளில் தான் மருத்துவ பட்ட மேற்படிப்பு உள்ளன. இந்த கல்லூரிகளில் 864 இடங்கள் உள்ளது. இந்த இடங்கள் போக அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சென்ற இடங்களில் 117 இடங்கள் திரும்பி வந்தன.

    இது தவிர 10 சுயநிதி மருத்துவகல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 122 உள்ளன. மொத்தம் 1103 இடங்களுக்கு இன்று(ஞாயிற்றுக்கிழமை) பொது கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

    22-ந் தேதி பல் மருத்துவ பட்டமேற்படிப்பில் சேர மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. அரசு பல் மருத்துவ கல்லூரிகளில்23 இடங்கள் உள்ளன. மேலும் சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 96 இருக்கின்றன.

    பல் மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்களுக்கு 22-ந் தேதி பகல் 2 மணியில் இருந்து கலந்தாய்வு நடக்கிறது. 23-ந் தேதி கலந்தாய்வு முடிவடைகிறது.
    Next Story
    ×