என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள சைக்கிள் உதிரி பாகங்கள் குடோனில் தீ விபத்து
    X

    ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள சைக்கிள் உதிரி பாகங்கள் குடோனில் தீ விபத்து

    ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள சைக்கிள் உதிரி பாகங்கள், பழைய அட்டை பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு, கச்சேரி வீதியில் தியாகராஜன் என்பவருக்கு சொந்தமான சைக்கிள் குடோன் உள்ளது. இங்கு சைக்கிள் தயாரிக்கும் உதிரி பாகங்கள், பழைய அட்டை பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

    இந்த குடோனின் பின் பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை அலுவலகம் செயல்பட்டு வந்தது.

    இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் குடோனில் பழைய அட்டை வைத்திருந்த இடத்தில் இருந்து கரும்புகை வெளி வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து டவுன் போலீசாருக்கும், ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் குடோனில் மாடி பகுதியில் அடுக்கி வைத்திருந்த அட்டை பெட்டிகள் எரிந்து நாசமாகின.

    குடோனின் பின் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் பின்பக்க கதவும் தீயில் கருகியது. அதற்குள் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால் தீ விபத்தில் இருந்து வங்கி தப்பியது. பெரும் விபத்தும் தவிர்க்கப்பட்டது.

    விபத்து நடந்ததும் வங்கி அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. எனினும் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×