என் மலர்
செய்திகள்

கவர்னர், முதல்-அமைச்சர் மோதலால் மாநில வளர்ச்சி பாதிப்பு- அன்பழகன் குற்றச்சாட்டு
புதுச்சேரி:
புதுவை உப்பளம் தொகுதி ஒத்தவாடை வீதியில் அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மே தின பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் பேசியதாவது:-
தமிழகத்தில் அம்மா ஆட்சியின் போது, தொழிலாளர் நலன் ஒன்றையே குறிக்கோளாக நினைத்து மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி நல்லாட்சி வழங்கினார். அவரை பின்பற்றி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் தொழிலாளர் நலனில் அக்கறையுடன் செயல்படுகிறார்.
ஆனால், தி.மு.க. துணையோடு புதுவையில் ஆட்சி நடத்தும் காங்கிரஸ் முதல்-அமைச்சர் நாராயணசாமி தொழிலாளர் விரோத ஆட்சியை நடத்தி வருகிறார்.
வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்குவேன் என பொய்யான வாக்குறுதியை மக்களிடம் அளித்து ஆட்சிக்கு வந்தவுடன் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பினார்.
புதுவை அரசின் தவறான தொழிலாளர் விரோத கொள்கை முடிவினால் புதுவையில் இயங்கி வந்த பெரிய, சிறிய தொழிற்சாலைகள் மூடப்பட்டு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி இழந்துள்ளனர். ஏ.எப்.டி., பாரதி, சுதேசி உள்ளிட்ட பல தொழிற்சாலைகள் நலிவுற்று நாசமாகி விட்டன.
குறைந்த பட்ச சம்பளம், அனுமதிக்கப்பட்ட வேலை நேரம் எதையும் இங்கு செயல்படுத்தப்படாததால் சிறிய, பெரிய வர்த்தக வியாபார நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் துயரத்துக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள்.
நிதி நெருக்கடி என காரணம் காட்டியும், கவர்னர் தடையாக இருக்கிறார் என காரணம் காட்டியும் இலவச அரிசி, முதியோர் பென்சன் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்காமல் வஞ்சிக்கும் புதுவை அரசு அனைத்து துறைகளிலும் தங்கு தடையின்றி ஊழல் புரிந்து வருகிறது.
அகங்காரத்தின் உச்சியில் கவர்னரும், முதல்- அமைச்சரின் செயல்பாடு ஆகியவற்றால் மக்கள் நலன் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு நிர்வாகம் சீரழிந்து விட்டது. மாநில வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.