search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதகுப்பட்டி அருகே வேன் கவிழ்ந்து விபத்து - 8 பேர் படுகாயம்
    X

    மதகுப்பட்டி அருகே வேன் கவிழ்ந்து விபத்து - 8 பேர் படுகாயம்

    மதகுப்பட்டி அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தர்மபுரி-ஈரோட்டைச் சேர்ந்த பெண்கள் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள கல்லல் கோவில் திருவிழாவையொட்டி ஆடல், பாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக தர்மபுரி, ஈரோட்டைச் சேர்ந்த கலைக்குழுவினர் நேற்று வேன் மூலம் சிவகங்கைக்கு புறப்பட்டனர்.

    சிவகங்கை மதகுப்பட்டி அருகே உள்ள சொக்க நாதபுரம் கருப்பணசாமி கோவில் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென டயர் வெடித்தது. இதில் நிலை தடுமாறி ஓடிய வேன் ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் வேனில் இருந்த தர்மபுரி முருகன் பட்டியைச் சேர்ந்த பிரகாஷ் (வயது27), கிருஷ்ணகிரி நொச்சம்பட்டியைச் சேர்ந்த மகேஷ் (27), ஈரோடு பள்ளிப்பாளையம் அஸ்வின் (27), கொடு முடியைச் சேர்ந்த டிரைவர் மகேந்திரன் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

    விபத்தில் சிக்கியவர்களை அந்தப்பகுதியினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 8 பேரும் ஆபத்தான நிலையில் மதுரை, சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து மதகுப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


    Next Story
    ×