search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெங்கல் அருகே குண்டும் குழியுமான சாலையில் ஏர்உழுது - மாதர் சங்கத்தினர் போராட்டம்
    X

    வெங்கல் அருகே குண்டும் குழியுமான சாலையில் ஏர்உழுது - மாதர் சங்கத்தினர் போராட்டம்

    வெங்கல் அருகே குண்டும் குழியுமான சாலையில் மாதர் சங்கத்தினர் காளை மாடுகளில் ஏர்பூட்டி சாலையில் உழும் போராட்டத்தை நடத்தினர்.
    பெரியபாளையம்:

    வெங்கல் அருகே உள்ள புன்னப்பாக்கம் கிராமத்தில் இருந்து அணைக்கட்டு வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.

    சுமார் 10 ஆண்டுகளாக இந்த சாலையை சீரமைக்கவில்லை என்று தெரிகிறது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் தலைவர் ராஜேஸ்வரி தலைமையில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் காளை மாடுகளில் ஏர்பூட்டி சாலையில் உழும் போராட்டத்தை நடத்தினர்.

    இதில் மாவட்ட தலைவர் ரமா.செயலாளர் மோகனா, பொருளாளர் பத்மா, விவசாய தொழிலாளர் சங்க வட்ட செயலாளர் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதுபற்றி அறிந்ததும் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சதக்கத்துல்லா, ஊராட்சி செயலாளர் ராஜா மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அதிகாரிகள் கூறும்போது, ஒன்றிய பொது நிதியில் பணம் இல்லை. எனவே, 2018-2019-ம் நிதி ஆண்டில் சாலை அமைத்து தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
    Next Story
    ×