search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சி மடத்தில் ஸ்ரீஜெயேந்திரர் உடல் கூடையில் வைத்து அடக்கம்
    X

    காஞ்சி மடத்தில் ஸ்ரீஜெயேந்திரர் உடல் கூடையில் வைத்து அடக்கம்

    சங்கராச்சாரியார் ஜெயேந்திரரின் உடல் சங்கர மடத்தில் கூடையில் வைத்து இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகெண்டார். #Kanchishankaracharya #JayendraSaraswathi
    காஞ்சீபுரம்:

    காஞ்சி சங்கர மடத்தின் 69-வது மடாதிபதி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சாமிகள் நேற்று காலை மரணம் அடைந்தார்.

    சங்கர மடத்தில் இருந்த அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை 8.10 மணியளவில் ஸ்ரீஜெயேந்திரர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82.

    ஸ்ரீஜெயேந்திரரின் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து காஞ்சி சங்கர மடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மடத்தில் ஜெயேந்திரர் வழக்கமாக பக்தர்களுக்கு ஆசி வழங்கும் அறையில் அவரது உடல் அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டது. அவரது நெற்றியில் விபூதி பூசி குங்கும பொட்டு வைத்து பக்தர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    அவரது உடலுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், சேவூர் ராமச்சந்திரன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், இல. கணேசன் எம்.பி, பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, டி.டி.வி.தினகரன், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள், பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினார்கள். இன்று காலையில் ஜெயேந்திரர் உடலுக்கு நித்யானந்தா அஞ்சலி செலுத்தினார்.

    நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய பக்தர்கள் அஞ்சலி செலுத்திய வண்ணம் இருந்தனர். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இருந்து பக்தர்கள் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

    இந்த நிலையில் இன்று காலை ஜெயேந்திரர் உடலுக்கு வேதமுறைப்படி பிருந்தாவன பிரவேச காரிய கிரமம் என்று அழைக்கப்படும் இறுதி சடங்கு நடைபெற்றது. இதற்காக காலை 8 மணிக்கு ஜெயேந்திரர் உடலை அறையில் இருந்து சங்கர மட மண்டபத்துக்கு கொண்டு வந்து அமர வைத்தனர்.


    பின்னர் இறுதி சடங்கு நிகழ்ச்சி தொடங்கியது. பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரால் அவரது உடலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சந்தனம், பன்னீர், விபூதி மூலமும் அபிஷேகம் செய்தனர். பின்னர் அவரது உடலுக்கு புதுவஸ்திரம் அணிவிக்கப்பட்டது.

    இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், மத்திய மந்திரிகள் பொன்.ராதாகிருஷ்ணன், சதானந்தகவுடா, தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் மத்திய மந்திரி ஜாபர்செரீப் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

    அதன் பிறகு ஜெயேந்திரர் உடலை அடக்கம் செய்யும் நிகழ்ச்சி தொடங்கியது. இதற்காக சங்கர மடத்தில் உள்ள 68-வது பீடாதிபதி சந்திர சேகரேந்திர சரஸ்வதி சாமிகள் சமாதியின் இடது புறத்தில் 7 அடி நீளத்தில், 7 அடி அகலத்தில் 9 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டது.

    அந்த குழிக்குள் சந்தன கட்டை, நவரத்தினங்கள், தங்கம், வைரம் போன்றவை போடப்பட்டன. பின்னர் ஜெயேந்திரரின் உடலை மூங்கில் கூடைக்குள் அமர வைத்தனர்.

    பின்னர் அவரது உடலை கூடையுடன் குழிக்குள் அமர்ந்த நிலையில் வைத்தனர். அதன் மேலே உப்பு, வசம்பு, மலர்கள் போன்றவை போடப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    உடல் அடக்கம் செய்யும் நிகழ்ச்சியிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். #Kanchishankaracharya #JayendraSaraswathi  #tamilnews
    Next Story
    ×