search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோடைகாலம் தொடங்கும் முன்பே வறட்சி: குன்னூரில் ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய்
    X

    கோடைகாலம் தொடங்கும் முன்பே வறட்சி: குன்னூரில் ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய்

    கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வறட்சி ஏற்பட்டுள்ளதால் குன்னூரில் ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய் கொடுத்து பொதுமக்கள் வாங்குகிறார்கள்.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். கடந்த ஆண்டு ஓரளவிற்கு நல்ல மழை பெய்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீராதாரங்கள் நிரம்பின. குன்னூரில் உள்ள ரேலியா அணை மற்றும் ஜிம்கானா, பந்திமை, கரன்சி தடுப்பணைகளும் நிரம்பின. இதனால் வாரத்திற்கு ஒருமுறை குன்னூர் பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

    இந்நிலையில் கோடை காலத்தில் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் வினியோகம் செய்ய போதிய ஊழியர்கள் இல்லை என்றும், இது தொடர்பாக முறையிட அதிகாரிகளும் யாரும் இல்லை என்று பொதுமக்கள் கூறினர். குடிநீருக்காக மக்கள் அங்குள்ள ஊற்றுகள் மற்றும் தனியார் தோட்டங்களில் தண்ணீர் தேடி அலைகின்றனர். ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய் கொடுத்து வாங்குகிறார்கள். கோடைகாலம் தொடங்கும் முன்பே வறட்சி ஏற்பட்டுள்ளது.

    இதை பயன்படுத்தி குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து சிலர் தண்ணீர் சேகரித்து அதனை தள்ளுவண்டி மூலம் கொண்டு வந்து வீடு, டீ கடைகள், உணவகங்களுக்கு இதைவிட கூடுதலாக விற்பனை செய்கின்றனர்.

    இதனால், பொதுமக்களின் நலன் கருதி குன்னூர் பகுதிக்கு என அறிவிக்கப்பட்ட எமரால்டு கூட்டு குடிநீர் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
    Next Story
    ×