search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினி மக்கள் மன்றத்திற்கு புதுவையில் உறுப்பினர் சேர்க்கை
    X

    ரஜினி மக்கள் மன்றத்திற்கு புதுவையில் உறுப்பினர் சேர்க்கை

    தற்போது, ரஜினி மக்கள் மன்றத்திற்கான உறுப்பினர் சேர்க்கை புதுச்சேரியிலும் தொடங்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்துள்ளார். இதற்காக தமிழகம் முழுவதும் ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் உறுப்பினர்களை சேர்த்து வருகிறார். மாவட்டந்தோறும் ரஜினி ரசிகர்கள் மன்றத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

    இதேபோல புதுவையிலும் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் ரஜினி ரசிகர் மன்ற மாநில செயலாளர் ரஜினிசங்கர் தலைமையில் நிர்வாகிகள் விண்ணப்பத்தை விநாயகரிடம் வைத்து சிறப்பு பூஜை செய்து உறுப்பினர்கள் சேர்க்கையை தொடங்கினர்.

    புதுவை சித்தர்கள் நிறைந்த ஆன்மிக பூமி. இங்கு ஆன்மிக அரசியல் உறுப்பினர் சேர்க்கையை தொடக்க உள்ளோம். இதற்காக மணக்குள விநாயகர் கோவிலில் விண்ணப்பத்தை வைத்து பூஜை செய்தோம். புதுவையில் உள்ள 540 ரஜினி ரசிகர் மன்ற கிளையில் 1996-ம் ஆண்டுவரை ஒரு லட்சத்து 27 ஆயிரம் உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர்.

    தற்போது ரஜினி மக்கள் மன்றத்தில் 3 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு வைத்துள்ளோம். 3 மாதத்தில் உறுப்பினர் சேர்க்கையை நிறைவு செய்து தலைவரிடம் அளிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாநில அமைப்பாளர் முகமது ரபிக், மாநில செய்தி தொடர்பாளர் தாரகை ராஜா, மாநில பிரதிநிதி யுவராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    சேர்க்கை விண்ணப்பங்கள் ரஜினியின் படம், பாபா முத்திரையுடன் அச்சிடப்பட்டுள்ளது. ரஜினி மக்கள் மன்றம் என்ற தலைப்பில் கட்டணம் இல்லா உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பெயர், முகவரியுடன் சட்டமன்ற தொகுதியின் விபரங்கள் கேட்கப்பட்டுள்ளது.

    மேலும் ஏற்கனவே ரஜினி ரசிகர் மன்ற உறுப்பினரா அல்லது புதிய உறுப்பினரா? ஏற்கனவே வகித்த கட்சியின் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண் போன்ற விவரங்களும் கேட்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் ‘வாழ்ந்தோம், வீழ்ந்தோம், எழுவோம்’ என்ற வாசகமும் அச்சிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×