search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.50 லட்சம் கேட்டு பள்ளி தாளாளரை கடத்திய கும்பல்: போலீஸ் விசாரணை
    X

    ரூ.50 லட்சம் கேட்டு பள்ளி தாளாளரை கடத்திய கும்பல்: போலீஸ் விசாரணை

    வாணியம்பாடியில் ரூ.50 லட்சம் கேட்டு பள்ளி தாளாளரை கடத்திய கும்பல் ரூ.50 லட்சம் பணத்தை பறித்து செல்லும் வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வாணியம்பாடி:

    வாணியம்பாடியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் செந்தில்குமார். கடந்த 19-ந்தேதி அதிகாலையில் அந்த பகுதியில் உள்ள கல்லூரி வளாகத்தில் நடைப்பயிற்சிக்கு வந்த போது அவரை காரில் மர்ம கும்பல் கடத்தி சென்றனர்.

    இதையடுத்து செந்தில்குமாரின் சகோதரர் உதயசந்தரை தொடர்பு கொண்ட கடத்தல் கும்பல் ரூ3 கோடி கொடுத்தால் செந்தில்குமாரை உயிருடன் ஒப்படைப்போம் என மிரட்டினர்.

    இதையடுத்து நடந்த பேரத்தில் செந்தில்குமாரை விடுவிக்க ரூ50 லட்சம் பணத்துடன் தருமபுரி மாவட்டத்துக்கு வர வேண்டும் என கடத்தல் கும்பல் தெரிவித்தது.

    இதுகுறித்து வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் உதயசந்தர் புகார் அளித்தார். போலீசார் ஆலோசனைப்படி கடத்தல் காரர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டன.

    போலீசாரின் அறிவுரைப்படி பணத்தை தயார் செய்த செந்தில்குமாரின் உறவினர்கள் அவரை மீட்க தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்துக்கு சென்றனர்.

    அவர்களுடன் தனிப்படை போலீசாரும் சென்றனர். கடத்தல்காரர்கள் கூறியபடி காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் உதயசந்தர் மற்றும் அவரது உறவினர் ஒரு காரிலும், தனிப்படை போலீசார் மற்றொரு காரிலும் காத்திருந்தனர்.

    அப்போது சிவப்பு வண்ண குல்லா அணிந்து வந்த நபர் ரூ.50 லட்சம் பணம் எங்கே? அதை கொடுத்தால் தான் செந்தில்குமாரை விடுவிக்க முடியும் என்கிறார்.

    இதை கேட்ட உதயசந்தர், செந்தில்குமாரை முதலில் அனுப்புங்கள் அவரை பார்த்த பிறகு பணத்தை கொடுக்கிறோம் என்கிறார். ஆனால் 20 நிமிடங்களுக்கு மேல் உதயசந்தரிடம் பேசிய கடத்தல் கும்பலை சேர்ந்த அந்த நபர் பணத்தை பறித்து கொண்டு செந்தில்குமாரை விடுவிக்கிறார்.

    இதனை தனிப்படை போலீசார் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றனர். கடத்தல் கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை.

    போலீசாரின் முன்னிலையிலேயே கடத்தல் கும்பல் ரூ.50 லட்சம் பணத்தை பறித்து செல்லும் வீடியோ காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    7 நிமிடங்கள் பதிவாகி உள்ள இந்த வீடியோவில் அங்கு நடந்த சம்பா‌ஷனைகள் துல்லியமாக பதிவாகி உள்ளது. வீடியோ காட்சியில் தெரியும் நபர் சிகப்பு நிற முகமூடி அணிந்துள்ளார். வெள்ளை நிற சட்டை அணிந்துள்ளார்.

    இந்த வீடியோ காட்சிகள் கடத்தப்பட்ட செந்தில் குமாரின் சகோதரர் உதயசந்திரன் என்பவரால் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் என தெரியவந்துள்ளது.

    இவர் பணம் கொடுக்க சென்ற போது தனது செல்போன் கேமராவை ஆன் செய்து பாக்கெட்டில் வைத்து சென்று பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.

    பள்ளி தாளாளர் கடத்தல் சம்பவம் நடைபெற்று ஒரு வாரம் ஆகியும் தனிப்படை போலீசார் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை யாரிடமும் தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கவில்லை என செந்தில் குமாரின் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    இது தொடர்பாக தனிப்படை போலீசார் கூறியிருப்பதாவது:-

    பள்ளி தாளாளர் கடத்தல் வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. தாளாளரை மீட்கச் சென்ற இடத்தில் செந்தில்குமாரின் உறவினர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ காட்சியை பதிவு செய்துள்ளார்.

    வழக்கு விசாரணை பாதிக்கும் என்பதால் வீடியோ காட்சியை வெளியிடக்கூடாது என நாங்கள் தெரிவித்து இருந்தோம். இதையும் மீறி அவர்கள் தற்போது வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளனர். எனினும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றனர். #tamilnews
    Next Story
    ×