என் மலர்tooltip icon

    செய்திகள்

    புவனகிரியில் மாமனாரை கத்தியால் குத்திக்கொன்ற மருமகள்
    X

    புவனகிரியில் மாமனாரை கத்தியால் குத்திக்கொன்ற மருமகள்

    புவனகிரியில் மதுபோதையில் ஆபாசமாக பேசிய மாமனாரை மருமகள் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த புவனகிரி தாமரைக்குளம் கீழக்கரையை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(வயது 62). இவரது மூத்த மகன் பாலமுருகன்(48). இவரது மனைவி தேன்மொழி(42). பன்னீர்செல்வம் தனது மூத்த மகன் பாலமுருகன் வீட்டில் தங்கியிருந்தார்.

    புவனகிரி கடைவீதியில் பன்னீர்செல்வமும், பாலமுருகனும் சலூன் கடை வைத்து நடத்தி வந்தனர். இதில் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் தினமும் தந்தை, மகனுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    நேற்று இரவு பன்னீர் செல்வம் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அங்கிருந்த தனது மகன் பாலமுருகனிடம் தகராறு செய்தார். ஏன் குடித்து விட்டு தகராறு செய்கிறீர்கள் என்று அவரிடம் பாலமுருகன் கேட்டார்.

    ஆனாலும் தொடர்ந்து அவர் மகனுடன் தகராறில் ஈடுபட்டு ஆபாசமாக பேசினார். அப்போது பன்னீர்செல்வத்தின் மருமகள் தேன்மொழி அங்கு இருந்தார். அவர் மாமனாரிடம் ஏன்? தந்தை, மகனும் சண்டை போடுகிறீர்கள்? என்று தட்டிக்கேட்டார். உடனே மருமகளையும் பன்னீர் செல்வம் ஆபாசமாக பேசினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த தேன்மொழி அங்கிருந்த கத்தியை எடுத்து மாமனார் பன்னீர்செல்வம் மார்பில் சரமாரியாக குத்தினார். இதில் பன்னீர்செல்வம் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். உடனே அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே பன்னீர்செல்வம் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து புவனகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    இந்தகொலை தொடர் பாக தேன்மொழி மற்றும் அவரது கணவர் பால முருகன் ஆகியோரை பிடித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    மாமனாரை மருமகள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் புவனகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×