என் மலர்
செய்திகள்

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற கைதி தப்பி ஓட்டம்
கடலூர்:
சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் பிரேம்ஜோசப் (வயது 25), முகமதுசாயித் (27).
இவர்கள் இருவரும் புதுவை அருகே கோட்டக்குப்பத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்து விட்டு ஓடிவிட்டனர். இதுதொடர்பாக கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். நகை பறித்த பிரேம் ஜோசப், முகமதுசாயித் ஆகியோரை விரட்டி பிடித்து கைது செய்து செய்தனர். இதில் அவர்கள் 2 பேர் கையிலும் காயம் ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களின் கையில் உள்ள காயங்கள் குணமாகாததால் அவர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் தனிவார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் இன்று அதிகாலை ஆஸ்பத்திரியிலிருந்து பிரேம்ஜோசப் தப்பி ஓடிவிட்டான். அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் ஆஸ்பத்திரி முழுவதும் தேடினர். எங்கும் அவனை காணவில்லை.
இதைத்தொடர்ந்து புதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய பிரேம்ஜோசப்பை தேடி வருகின்றனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த கைதி தப்பி ஓடிய சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews






