என் மலர்
செய்திகள்

திருமானூரில் ஆஞ்சநேயர் கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு
திருமானூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலின் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருமானூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வழக்கம் போல பூசாரி பூஜைகளை முடித்து விட்டு நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் நேற்று கோவிலை பராமரித்து வரும் நபர்கள் கோவிலை சுத்தம் செய்ய சென்றனர். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் கோவில் உள்ளே சென்று பார்த்த போது அங்கு இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்து பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருமானூர் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.
இதேபோல் கோவில் அருகே உள்ள தனியார் கியாஸ் ஏஜென்சி கடையின் பூட்டையும் மர்ம நபர்கள் உடைத்து உள்ளே சென்றுள்ளனர். மேலும் அங்கு உள்ள மேஜையை உடைத்துள்ளனர். அதில் பணம் ஏதும் இல்லாததால் அங்கிருந்த பேப்பர்களை வீசி விட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவங்கள் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலின் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கடந்த 4-ந் தேதி திருமானூர் போலீஸ் நிலையம் எதிரே உள்ள டீக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பணம் ஏதும் கிடைக்காமல் திரும்பி சென்றது குறிப்பிடத்தக்கது. #tamilnews
Next Story






