search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா சிகிச்சை வீடியோ அப்பல்லோவில் தான் எடுக்கப்பட்டதா? - சந்தேகம் எழுப்பும் ஆனந்தராஜ்
    X

    ஜெயலலிதா சிகிச்சை வீடியோ அப்பல்லோவில் தான் எடுக்கப்பட்டதா? - சந்தேகம் எழுப்பும் ஆனந்தராஜ்

    ஜெயலலிதா சிகிச்சை பெறுவதுபோன்று வெளியிடப்பட்ட வீடியோவில் சந்தேகம் உள்ளதாகவும், அந்த வீடியோவின் உண்மை நிலையை கண்டறியவேண்டும் என்றும் நடிகர் ஆனந்தராஜ் வலியுறுத்தி உள்ளார்.
    சென்னை:

    நடிகர் ஆனந்தராஜ் இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜெயலலிதா நன்றாக இருக்கிறார். பழச்சாறு அருந்துகிறார் என்று அன்று நாங்கள் பேட்டி கொடுத்தோம்.

    ஜெயலலிதா பழச்சாறு அருந்துவதை நான் எனது நண்பர்கள் எல்லோரும் பார்த்தோம். நாங்கள் திரைப்படத்துறையில் இருப்பவர்கள். மார்பிங் செய்வது எப்படி? உண்மையான படம் எது என்பது எங்களுக்கு தெரியும்.

    அது உண்மையான படமாக இருந்தால் இடம்காலம் தேதி நேரம் வேண்டும். உங்கள் செல்போனில் என்னை ஒரு போட்டோ எடுத்தால் கூட அதில் நேரம் பதிவாகிவிடும். தேதியுடன் வரும். அது இல்லாமல் மொட்டையாக ஒரு படத்தைக் காட்டுவது நம்பிக்கைக்குரிய வி‌ஷயமாக தெரியவில்லை.

    அம்மாவின் பின்னால் இருக்கிற மரம் அழகுக்காக வைக்கும் மரம். அது அம்மாவின் வீட்டில் இருக்கிறது. ஆனால் 2-வது மாடியில் அம்மா மருத்துவமனையில் இருந்தார்.

    பின்னர் உடல் நலம் தேறி 3-வது மாடிக்கு மாறி விட்டார் என்று சொன்னார்கள். 3-வது மாடி என்றால் 40 அல்லது 50 அடி உயரம் வரும். 50 அடி உயரத்துக்கு வருகிற அழகு மரம் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. பாம் ட்ரீ என்ற அந்த அழகு மரம் ஒரு குறிப்பிட்ட உயரம் மட்டும் தான் வளரும். 50 அடி உயரத்துக்கு வளராது.

    எனவே அந்த படம் ஜெயலலிதாவின் வீட்டில் எடுக்கப்பட்ட படமோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. ஒரு செயினை அறுத்துக் கொண்டு ஓடினால் கூட எங்காவது இருக்கும் ஒரு வீடியோவை வைத்து கண்டு பிடித்து விடுகிறார்கள்.

    அம்மா இல்லத்தில் இருந்து மருத்துவமனைக்கு போனார். அவரது வீட்டில் கேமரா இருக்கிறது. வீதியில் கேமரா இருக்கிறது. அந்த வீதியில் உள்ள ஒவ்வொரு இல்லத்திலும் கேமரா இருக்கிறது.

    அண்ணாசாலையில் உள்ள மேம்பாலத்தில் 24 கேமராக்கள் உள்ளன. மருத்துவமனையில் கேமராக்கள் உள்ளன. இதையெல்லாம் அழித்துவிட்டு இந்த ஒரு படத்தை மட்டும் காட்ட வேண்டிய அவசியம் என்ன என்று எனக்கு தெரியவில்லை.


    இந்த உண்மையை கண்டறிய வேண்டிய கடமை விசாரணை கமி‌ஷனுக்கு இருக்கிறது. இதையெல்லாம் கண்டறிந்து அவர்கள் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

    ஒழுங்கு நடவடிக்கை குழு இன்று கூட கட்சியில் இருந்து பலரை நீக்கியுள்ளது. இன்னும் பலரை நீக்கக்கூடும். நேற்று தினகரன் கொடுத்த பேட்டியை பார்த்தேன். அவரது முகத்தில் ஒரு சோர்வு தெரிந்தது. என்னை விட்டு விடுங்கள். நான் ஆசைப்படவில்லை. இது என் வேலை அல்ல, நான் விருப்பம் இல்லாமல், பற்று இல்லாமல் இந்த கட்சியில் இருக்கிறேன் என்று சொல்கிறார்.

    அப்படியென்றால் அவர் பின்னால் ஏன் போக வேண்டும். கட்சி நடத்த தொண்டர்கள் இருக்கிறார்கள்.

    அ.தி.மு.க. ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. பொதுக்குழு செயற்குழுவை கூட்டி ஒரு தலைமையை நிர்வகித்து அந்த தலைமையை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி அங்கிருந்து இரட்டை இலையை பெற்றிருக்கிறார்கள். இது தான் உண்மையான அ.தி.மு.க. என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

    ‘‘அம்மாவின் மரணத்தில் இருக்கிற உண்மைகளை வெகுவிரைவில் வெளியே கொண்டு வர வேண்டும். அந்த குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண்மணி, அம்மா பின்னால் என்ன இருக்கிறது என்பதை பார்ப்பதற்காக எடுக்கச் சொன்ன படம் என்று சொல்கிறார். இதை நாம் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

    அம்மாவுக்கு பின்னால் இருக்கிறது என்றால் அம்மா கண்ணாடி பார்க்காதவர்களா? முன்னால் கண்ணாடி வைத்தால் கூட பின்னாடி என்ன இருக்கும் என்று தெரியுமே.

    அவர்கள் பார்க்காத கண்ணாடியா? எங்களுக்கெல்லாம் அவர் மூத்தவர். அரைமணி நேரம் அவர் செய்தியில் பேசினால் 2 முறை அவரது முகம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து விட்டு வருவார்.

    தெய்வமாக, தாயாக நினைக்கும் ஒருவரின் ஆடை கலைந்திருக்கிறது. அதை கூட சரி செய்யவில்லை. ஒருவேளை பின்னால் இருப்பதை பார்ப்பதற்காக எடுங்கள் என்று சொல்லி இருந்தாலும் எடுத்ததை அழிக்க வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கிறது. அதை அப்படியே பத்திரப்படுத்தி வைத்திருந்தால் அப்படி என்ன சூழ்ச்சி. அதில் ஏதோ சதி இருக்கிறது என்பதை மக்கள் உணருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×