search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதாவின் 2 வரலாற்று புத்தகம்: பிரபல எழுத்தாளர் வெளியிடுகிறார்
    X

    ஜெயலலிதாவின் 2 வரலாற்று புத்தகம்: பிரபல எழுத்தாளர் வெளியிடுகிறார்

    ஜெயலலிதாவின் நினைவுநாளை முன்னிட்டு அவரது வாழ்க்கை பற்றிய இரண்டு வரலாற்று புத்தகத்தை பிரபல எழுத்தாளர் வெளியிட இருக்கிறார்.
    சென்னை:

    பிரபல பத்திரிகையாளரும், ஆங்கில எழுத்தாளருமான பப்ரி சென் ஸ்ரீராமன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ஏற்கனவே ஜெயலலிதா ஏ ஜெர்னி என்ற பெயரிலும், அம்மா என்ற பெயரிலும் 2 ஆங்கில புத்தகங்களை வெளியிட்டு இருந்தார்.

    ஜெயலலிதா மரணம் அடைந்து முதலாம் ஆண்டு நினைவு நாள் வருவதையொட்டி இந்த புத்தகங்களில் மாற்றம் செய்து புதிதாக வெளியிடப்பட இருக்கிறது. அதில், அம்மா புத்தகம் தமிழாக்கம் செய்து வெளியிடப்படுகிறது.

    இந்த புத்தகத்தை எழுதிய பப்ரி சென் ஸ்ரீராமன் ஜெயலலிதாவின் தோழியாகவும் இருந்தவர் ஆவார். எனவே, அவருடைய வாழ்க்கை வரலாற்றை முழுமையாக அறிந்து புத்தகத்தில் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

    இந்த புத்தகம் சம்பந்தமாக பப்ரி சென் ஸ்ரீராமன் கூறியதாவது:-

    வழக்கில் தண்டனை பெற்று 2 தடவை ஜெயிலுக்கு சென்று திரும்பிய நிலையிலும் ஜெயலலிதா அரசியலில் ஜொலித்தது ஆச்சரியமான வி‌ஷயமாக இருந்தது. மேலும் அவருடைய அரசியல் பயணங்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வெற்றிகரமாக சென்றது.

    இதன் காரணமாக ஜெயலலிதாவை பற்றி புத்தகம் எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.

    இதுபற்றி எழுத்தாளரும், புத்தக பதிப்பாளருமான ரேணு கவுல் வர்மாவிடம் கூறியபோது, அதை ஆர்வமாக ஏற்றுகொண்டார். அவரும், நானும் சேர்ந்து இந்த புத்தகத்தை எழுதினோம்.

    அவருடைய குழந்தை பருவ காலத்தில் இருந்து ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வளர்ந்த விதங்கள் பற்றி இதுவரை யாரும் சொல்லாத தகவல்களை இதில் குறிப்பிட்டு இருக்கிறோம்.

    சினிமா வாழ்க்கை, பின்னர் அரசியலில் நுழைந்து அவர் முன்னேறிய சம்பவங்கள், அதில் அவர் சந்தித்த போராட்டங்கள் என அனைத்து விவரங்களும் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

    ஒரு பெண், கணவரோ மற்ற ஆண்களின் துணையோ இல்லாமல் தன்னந்தனியாக நின்று போராடி ஒரு உயர்ந்த இடத்தை பெற்றிருப்பதை சிறப்பாக இந்த புத்தகத்தில் சொல்லி இருக்கிறோம்.

    ஜெயலலிதா ஜெர்னி என்ற புத்தகம் ஏராளமான படங்களை கொண்டது. அவை அனைத்தும் இது வரை பார்க்காத அரிய படங்கள் ஆகும். இவற்றை நாங்கள் கஷ்டப்பட்டு சேகரித்து புத்தகத்தில் இடம்பெற செய்துள்ளோம்.

    ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருந்த ஒய்.ஜி. பார்த்தசாரதி குடும்பத்தினர், நடிகை சச்சு மற்றும் பிலிம் நியூஸ் ஆனந்தன் ஆகியோர் மற்றும் பலரிடம் இருந்த அரிய புகைப்படங்களை பெற்று புத்தகத்தில் சேர்த்துள்ளோம்.

    தமிழக செய்தி துறையிலும் ஏராளமான படங்கள் கிடைத்தன. அவற்றையும் இடம்பெற செய்துள்ளோம். அவர் பலவிதமான உடைகள் அணிந்திருப்பது, குடும்பத்தினருடன் இருப்பது, தனது சகோதரருடன் இருப்பது போன்ற பல படங்கள் புத்தகத்தில் உள்ளன.

    மேலும் அவரை பற்றி கிடைத்த உண்மையான விவரங்கள் மட்டுமே புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

    இந்த புத்தகத்தை தயாரிக்கும் பணி முன்கூட்டியே தொடங்கி மே மாதம் 2016-ல் அதன் புரூப்கள் தயாராக இருந்தன. ஆனால், ஜெயலலிதா அதை பார்ப்பதற்கு முன்பே இறந்து விட்டார். ஆனாலும், இந்த புத்தகம் ஜெயலலிதாவின் பல நிலைகளை சொல்லும் வகையில் அமைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×