என் மலர்
செய்திகள்

பாலக்கோடு அருகே லாரி கவிழ்ந்து 15 பேர் காயம்
பாலக்கோடு அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் கூலி தொழிலார்கள் 15 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
தர்மபுரி:
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் இருந்து கரும்பு லோடு ஏற்றிக் கொண்டு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை நோக்கி லாரி வந்து கொண்டிருந்தது. இந்த கரும்பு லோடு மேற்பகுதியில் கரும்பு வெட்டும் கூலி தொழிலாளர்கள் 18 பேர் அமர்ந்து பயணம் செய்தனர். லாரியை கோவிந்தராஜ் என்பவர் ஓட்டினார்.
இன்று அதிகாலை பாலக்கோடு அருகே உள்ள பாரதிநகர் வளைவில் லாரி வந்தபோது திடீரென லாரி கவிழ்ந்தது. இதில் லாரி லோடு மேல் அமர்ந்திருந்த 18 பேரில் 15 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
காயம் அடைந்த இவர்கள் பாலக்கோடு மற்றும் கவுண்டம்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்த விபத்து குறித்து பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story