என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்ணாடம் அருகே தீ விபத்தில் 3 வீடுகள் எரிந்து சாம்பல்: 5 பேர் மயக்கம்
    X

    பெண்ணாடம் அருகே தீ விபத்தில் 3 வீடுகள் எரிந்து சாம்பல்: 5 பேர் மயக்கம்

    பெண்ணாடம் அருகே கூரை வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அடுத்தடுத்த வீடுகளில் பரவியது. இதில் சிலிண்டர் வெடித்ததில் 5 பேர் மயக்கம் அடைந்தனர்.
    பெண்ணாடம்:

    பெண்ணாடம் அருகே உள்ள துரையூர் காலனி பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 35). இவர் இன்றுகாலை தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்றார். அப்போது திடீரென அவரது கூரை வீட்டில் தீப்பிடித்தது. தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது.

    அந்த நேரத்தில் காற்று அதிகமாக அடித்ததால் செந்தில்குமார் வீட்டின் அருகே இருந்த பழனிவேல் மற்றும் பரமசிவம் ஆகியோரின் கூரை வீட்டிற்கும் தீ பரவியது. ஆகையால் 3 வீடுகளும் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.

    பின்னர் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. அப்போது செந்தில்குமார் மற்றும் பழனிவேல் வீட்டில் இருந்த சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

    இதில் அதிர்ச்சியடைந்த அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமி, மகேந்திரன் உள்ளிட்ட 5 பேர் மயங்கி விழுந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெண்ணாடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதற்கிடையே தீயணைப்பு படையினர் வருவதற்கு முன்பாகவே 3 கூரை வீடுகளும் முற்றிலும் எரிந்து சாம்பலாயின.

    தீ விபத்தில் எரிந்து சாம்பலான பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். எப்படி தீவிபத்து நடந்தது, என்ன காரணம் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் பெண்ணாடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×