என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு மாவட்டத்தில் கொட்டிய மழை: வனக்குட்டைகள் நிரம்பியது
    X

    ஈரோடு மாவட்டத்தில் கொட்டிய மழை: வனக்குட்டைகள் நிரம்பியது

    ஈரோடு மாவட்டம் முழுவதும் பலத்த மழை கொட்டி வருகிறது. மேலும் வனக்குட்டைகளும் நிரம்பி உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து தினமும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

    நேற்று மாலை மற்றும் இரவில் மொடக்குறிச்சி, சென்னிமலை மற்றும் கொடுமுடி பகுதிகளில் பலத்த மழை கொட்டியது.

    இந்த பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கழிவு நீர் கால்வாய்களில் மழை வெள்ளம் பாய்ந்து ஓடியது.

    குறிப்பாக சென்னிமலை பகுதியில் மாலை 5 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை 6.20 வரை பெய்தது. கடும் வறட்சியில் காணப்பட்ட அப்பகுதியில் பெய்த இந்த மழையால் சென்னிமலையில் எங்கு பார்த்தாலும் வெள்ளக் காடாக காட்சி அளித்தது.

    இந்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும் பலத்த மழையால் விவசாயிகளும், பொது மக்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    இதே போல் மொடக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று கன மழை கொட்டியதால் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    சத்தியமங்கலம் வனப்பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தாளவாடி பகுதியில நேற்று முன்தினம் போல் நேற்றும் மழை பெய்தது. இதனால் வனக்குட்டைகள் நிரம்பியது.

    மேலும் கடம்பூர் வனப் பகுதியிலும் மழை கொட்டி வருகிறது. கடம்பூரை அடுத்த உகினியம் செல்லும் வழியில் உள்ள காகரகுட்டை மழையால் நிரம்பி உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள வன விலங்குகளுக்கு தண்ணீர் பஞ்சம் தீர்ந்தது.

    மாலை நேரங்களில் யானைகள் குட்டிகளுடன் வந்து தண்ணீர் குடித்து செல்கிறது. அப்போது ஆர்வ மிகுதியால் யாரும் அங்கே செல்ல வேண்டாம். போட்டோ எதுவும் எடுக்க வேணடாம் என வனத் துறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.
    Next Story
    ×