search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் 4 ஆயிரம் பேர் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்
    X

    கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் 4 ஆயிரம் பேர் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்

    கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 4 ஆயிரம் பேரை இலங்கை கடற்படை விரட்டியடித்தது.
    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரம் மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக நேற்று கடலுக்கு சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே படகுகளை நிறுத்தி மீன்பிடி பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது இலங்கை கடற்படையினர் 10-க்கும் மேற்பட்ட குட்டி ரோந்து கப்பல்களில் அங்கு வந்தனர். அவர்களை கண்டதும் தமிழக மீனவர்கள் அச்சம் அடைந்தனர்.

    இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை பார்த்து ‘இது எங்கள் எல்லைப்பகுதி, இங்கு மீன் பிடிக்கக்கூடாது’ என எச்சரித்தனர்.

    இதனைத் தொடர்ந்து மீனவர்கள் அவசர அவசரமாக அங்கிருந்து புறப்பட முயன்றனர். அப்போது இலங்கை கடற்படையினர் சில படகுகளுக்குள் புகுந்து மீனவர்களை தாக்கினர்.

    மேலும் அந்த படகுகளில் இருந்த மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர். வலைகளை அறுத்து எறிந்தனர்.

    இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் அங்கிருந்து படகுகளை எடுத்துக் கொண்டு வேகமாக புறப்பட்டனர். அவர்களை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் விரட்டியடித்தனர்.

    இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கையால் மீனவர்கள் மீன் பிடிக்காமல் இன்று காலை கரை திரும்பினர்.



    அவர்கள் கூறுகையில், ‘கச்சத்தீவு அருகே அமைதியான முறையில் நாங்கள் மீன்பிடித்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எங்களை விரட்டியடித்தனர். நாங்கள் வேகமாக கிளம்ப முயன்றபோது, வலைகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதோடு எங்களையும் தாக்கினர்.

    மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற சில நாட்களில் இது போன்ற சம்பவம் நடப்பது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 2 முறை மீனவர்களை தாக்கியதோடு சிறை பிடித்தும் சென்றனர். ஆனால் தற்போது தாக்கி விரட்டியடித்துள்ளனர். இந்த சம்பவத்தால் எங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

    மீனவர்கள் மீதான தாக்குதல் ராமேசுவரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையை மாற்ற மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தினர்.
    Next Story
    ×