search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?: தமிழக அரசு தகவல்
    X

    ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?: தமிழக அரசு தகவல்

    ஒரே தேசம், ஒரே வரி, ஒரே சந்தை என்ற நிலைப்பாட்டில் கொண்டு வரப்பட்ட ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? என்பது பற்றி தமிழக அரசு அறிவித்துள்ளது.
    சென்னை:

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி.) என்கிற புதிய வரி விதிப்பு முறையை பாராளுமன்ற மைய மண்டபத்தில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் தொடக்கி வைத்தனர். ஒரே தேசம், ஒரே வரி, ஓரே சந்தை என்ற முழக்கத்தோடு நாடு முழுவதும் புதிய வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்விழாவில் தமிழ்நாடு அரசின் சார்பாக மீன்வளம், நிதி, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், வணிகவரி மற்றும் பதிவுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திரமவுலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சரக்குகள் மற்றும் சேவைகள் வரியின் பயன்கள் என்னவென்றால், இதன் மூலம் ரிட்டன்(கணக்கு) தாக்கல் எளிமையாகிறது. சிறு வணிகர்கள், தயாரிப்பாளர்கள், உணவகங்களுக்கு பெரும் நிம்மதி அளிக்கிறது.

    பெரும்பாலான வீட்டு உபயோக பொருட்களுக்கு ஒற்றை வரிதான் வசூலிக்கப்படும். ஜி.எஸ்.டி. கீழ் ஒரு பதிவேடு போதுமானது. பதிவுக் கட்டணம் இல்லை. வரிவிலக்கு பொருட்கள் மட்டும் வழங்கும் வணிகர்களுக்கு ஜி.எஸ்.டி. பதிவு அவசியமில்லை.

    சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்டத்தை பற்றி வணிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாநில அளவில் மீன்வளம், நிதி மற்றும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர், வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சரும் பங்கேற்ற சிறப்பு கருத்தரங்கம் ஜூன் 28-ந் தேதியன்று சென்னையில் நடத்தப்பெற்று வணிகர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு துறை சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.

    மாநிலம் முழுவதும் ஒவ்வொரு வரிவிதிப்பு வட்டத்திலும் குறைந்தபட்சம் 2 கருத்தரங்குகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு சுமார் 650 கருத்தரங்குகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதைப்போன்று, வணிக வரி மாவட்ட அளவிலும் கருத்தரங்குகள் மூலம் வணிகர்களின் சந்தேகங்களை களைய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஓவ்வொரு வணிக வரி வட்டத்தில் உதவி மையமும் வணிக வரி மாவட்ட அளவில் ஒருங்கிணைந்த உதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

    இம்மையங்களை அணுகி வணிகர்கள் சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டத்தின் கீழான சந்தேகங்களுக்கு தெளிவுரைகள் பெற்று சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.



    வணிகர்களுக்கு அவ்வப்போது எழும் சந்தேகங்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய ஜி.எஸ்.டி.என்.-ல் நேரடியாக இணைக்கப் பெற்ற கட்டணமில்லா தொலைபேசி (01204888999) மற்றும் வணிகவரித்துறையின் உதவித் தொலைபேசி (18001036751) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அனைத்து வணிக வரி அலுவலர்களுக்கும் ஜி.எஸ்.டி. சட்டம் மற்றும் ஜி.எஸ்.டி.என். இணையதள மென்பொருள் பயன்பாடு தொடர்பாக விரிவான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியினை மேலும் தொடர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ஜி.எஸ்.டி. அமலாக்கத்தின்போது சுமுகமான முறையில் வணிகர்கள் புதிய வரி முறைக்கு மாறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறும் வணிகர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யுமாறும் அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் தற்போதுள்ள ஆறரை லட்சத்துக்கும் மேல் பதிவு பெற்ற வணிகர்களில் 91 சதவீதம் ஜி.எஸ்.டி.என். வலைத்தளத்தில் பதிவு மாற்றம் பெற விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு தற்காலிக ஜி.எஸ்.டி.ஐ.என். அளிக்கப்பட்டுள்ளது.

    இதை பயன்படுத்தி 3 மாதங்கள் வரை தங்கு தடையின்றி வணிகம் செய்யலாம். மேலும், மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரித்துறை மூலமாக விரிவான ஏற்பாடுகள் மத்திய அரசால் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த புதிய வரிவிதிப்பு முறையை வெற்றிகரமாக அமல்படுத்த வணிகர்களும், பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×