search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு இதுவரை 2 டி.எம்.சி. தண்ணீர் வந்தடைந்தது
    X

    கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு இதுவரை 2 டி.எம்.சி. தண்ணீர் வந்தடைந்தது

    • தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஆந்திர அரசு கடந்த மாதம் 5ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்தது.
    • பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 588 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம். கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரி நீர்மட்டம் குறைந்து வந்தது.

    இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி தமிழக அரசு ஆந்திரா அரசுக்கு கடிதம் எழுதியது. கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.

    ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீர் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஆந்திர அரசு கடந்த மாதம் 5ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்தது.

    ஆரம்பத்தில் வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பின்னர் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. தற்போது வினாடிக்கு ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்தத் தண்ணீர் கடந்த மாதம் 8-ந் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்தடைந்தது. அன்றிரவே பூண்டி ஏரிக்கு சென்றடைந்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

    இன்று காலை காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 25.71அடி ஆக பதிவாகியது. 947 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. கிருஷ்ணா நீர் தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வினாடிக்கு 588 கன அடியாகவும், பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 550 கன அடி வீதம் சென்று கொண்டிருந்தது.

    மழைநீர் வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 588 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 13 கனஅடி வீதம் தண்ணீர் அனுப்பப்படுகிறது.

    கடந்த மாதம் 8ஆம் தேதி முதல் இன்று காலை வரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 41 நாட்களில் 2.105 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×