search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல்லில் சோகம் - கார் விபத்தை ஆய்வு செய்த போது வேன் மோதி 2 போலீசார் பலி
    X

    பலியான போலீசார்

    நாமக்கல்லில் சோகம் - கார் விபத்தை ஆய்வு செய்த போது வேன் மோதி 2 போலீசார் பலி

    • நாமக்கல்லில் கார் விபத்தை ஆய்வு செய்தபோது வேன் மோதியதில் 2 போலீசார் உயிரிழந்தனர்.
    • வேன் மோதிய விபத்தில் மேலும் 4 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நாமக்கல்:

    ராசிபுரம் அருகே விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணியில் இருந்த போலீசார் மீது சுற்றுலா வேன் மோதியதில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தனர்.

    ராசிபுரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அணைப்பாளையம் பிரிவு சாலை உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களாக மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. அதையொட்டி இணைப்புச் சாலை அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து நடந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் திருநெல்வேலியில் இருந்து ஓசூருக்கு சென்ற கார், சாலையில் திசை திருப்புவதற்காக வைக்கப்பட்டு இருந்த தடுப்பு மீது மோதி விபத்துக்கு உள்ளானது. தகவல் அறிந்த ராசிபுரம் மற்றும் புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    புதுச்சத்திரம் போலீஸ் நிலைய சிறப்பு-சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், ராசிபுரம் போலீஸ்காரர் தேவராஜன் ஆகியோரும் அங்கு வந்து வாகன போக்குவரத்தை சரிசெய்தனர்.

    மேலும் அந்த வழியாக சென்ற லாரி ஒன்றை, சாலையோரம் நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது திருநள்ளாரில் இருந்து சேலம் மாவட்டம் இளம்பிள்ளைக்கு சென்ற சுற்றுலா வேன் ஒன்று அந்த வழியாக அதிவேகமாக வந்தது.

    கண் இமைக்கும் நேரத்தில் சுற்றுலா வேன் லாரியின் பின்னால் நின்று கொண்டிருந்த போலீசார் மற்றும் லாரியின் மீது பயங்கரமாக மோதியது. இதில் போலீஸ்காரர் தேவராஜன்(வயது 37) உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானர். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர்(55) பலத்த காயம் அடைந்தார். அவரை உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே சந்திரசேகர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்தில் மற்றொரு போலீஸ்காரர் மணிகண்டன் மற்றும் சுற்றுலா வேனில் பயணம் செய்த 3 பேரும் காயமடைந்தனர். அவர்கள் 4 பேரும் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, ராசிபுரம் டி.எஸ்.பி. செந்தில்குமார், நாமக்கல் டி.எஸ்.பி. சுரேஷ் ஆகியோர் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று விபத்தில் பலியான போலீஸ்காரர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.

    விபத்தில் பலியான சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகருக்கு, வனிதா என்ற மனைவியும், ஹரிபிரசாத் என்ற மகனும், பார்கவி என்ற மகளும் உள்ளனர். போலீஸ்காரர் தேவராஜனுக்கு, அமுதா என்ற மனைவியும், சுஜித் (8) என்ற மகனும், மோஷிகா (6) என்ற மகளும் உள்ளனர். தேவராஜனின் மனைவி அமுதா மங்களபுரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×