search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசன்
    X
    கமல்ஹாசன்

    தமிழகத்தை கட்டமைக்க தேவையான அஸ்திவாரம் நேர்மை - கமல்ஹாசன்

    கல்வியை, கண்டவர் கையில் கொடுத்துவிட்டு சாராயத்தை பாதுகாப்பாக விற்கிறார்கள் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார்.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப் பேரவை தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நீதி மையம் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அருப்புக்கோட்டையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி. உங்களுக்கு வேலை செய்வதற்காக வந்துள்ளோம். உயர்ந்த நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கப்படும், இலவசங்கள் கிடையாது. ஏனெனில் இலவசங்களால் ஏழ்மையை போக்க முடியாது.

    நாம் வறுமையற்ற அருப்புக்கோட்டையை உருவாக்குவோம். நான் ஹெலிகாப்டரில் சென்று பிரசாரம் செய்வதாக கூறுகிறார்கள். எனது சொந்த செலவில் நான் ஹெலிகாப்டரில் செல்கிறேன்.

    கஜா புயலைப் பார்வையிட்டது போல் மக்கள் பணத்தில் ஹெலிகாப்டரில் செல்லவில்லை.  நமது வேட்பாளர்கள் உங்களுக்கு சேவை செய்ய வந்துள்ளார்கள். இவர்களுக்கு நான் பல்லக்கு தூக்குவேன். என் தோளில் சுமப்பேன்.

    எனது வாக்குறுதிகளை ஸ்டாலின் அப்படியே எடுத்துக் கூறுகிறார். மிகுந்த பசியில் உள்ள அவர்கள் இரட்டை இலையில் கூட சாப்பிடுவார்கள்.

    திரைப்பட வாய்ப்பை விட்டு வந்ததால் எனக்கு ரூ.300 கோடி நஷ்டம் அல்ல. வருமானத்தை விட்டு விட்டு வந்துள்ளேன். அ.தி.மு.க. இடையூறு செய்யாமல் இருந்திருந்தால் எனது வருமானத்தை ரூ.250 கோடியாக காட்டியிருப்பேன்.

    ஆட்சியாளர்கள் பெரும் தொகையை எடுத்துக் கொண்டு இலவசங்கள் என்ற பெயரில் சில்லறையை வீசுகிறார்கள்.

    உங்கள் ஓட்டு விற்பனைக்கு இல்லை என்று கூறுங்கள். அல்லது ரூ.5 லட்சம் கேளுங்கள். சலுகைகளை கொடுத்தால் அதை திருப்பி வாங்க டாஸ்மாக் என்ற கல்லாப் பெட்டியை வைத்துள்ளார்கள்.

    கல்வியை, கண்டவர் கையில் கொடுத்துவிட்டு சாராயத்தை பாதுகாப்பாக விற்கிறார்கள். இங்கு படிப்புக்கு மதிப்பில்லாமல் போகிறது. எனவே இளைஞர்களின் திறனை மேம்படுத்த செய்ய வேண்டும்.

    திறன் மேம்பாட்டு மையம் அமைப்பது இந்தியாவின் புதிய சத்தியாகிரகம். மனிதவளம் தங்கத்தை விட மதிப்பு மிக்கதாக உயர்த்தப்பட வேண்டும்.

    வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தால் தமிழன் வெல்வான். நாங்கள் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை தருகிறோம்.

    தமிழகத்தை கட்டமைக்க தேவையான அஸ்திவாரம் நேர்மை என்பதாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×