search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    டாக்டர் கமலி ஸ்ரீபால்
    X
    டாக்டர் கமலி ஸ்ரீபால்

    மருத்துவம் அறிவோம்: நுண்ணுயிர்களால் ஏற்படும் நன்மை-தீமைகள்- 234

    எல்லா பிறந்த குழந்தைகளுமே டாக்டர், நர்சு, சுற்றுப்புற சூழ்நிலை இவற்றில் இருந்து நுண்ணுயிர்களை பெறுகின்றது.


    நம்மில் பலருக்கு ஒரு வழக்கம் உள்ளது. அது தன்னைத்தானே பரிதாபப்படுத்திக் கொண்டு பேசும் ஒரு வழக்கம் ஆகும். எனக்கு யாருமே இல்லை. எல்லா உறவுகள் இருந்தும் நான் யாரும் இல்லாதவனாகவே இருக்கிறேன் என விவரித்து தானே கண்ணீர் விட்டு பரிதாபப்பட்டுக் கொள்வர். இவர்களுக்கெல்லாம் மருத்துவ ரீதியாக ஒன்று சொல்லப்பட வேண்டும். ஒவ்வொரு நபரும் ஏராளமான பல மில்லியன் நுண்ணுயிர்களை உடலில் சுமந்தே வாழ்கின்றனர். இவ்வளவு நுண்ணுயிர்களை கூட வைத்துக்கொண்டு எனக்கு யாருமே இல்லை என இனிமேல் சொல்லக்கூடாது அல்லவா!

    நாம் நுண்ணுயிர்களால் சூழப்பட்டும், உடலில் அதை சுமந்து கொண்டும் தான் வாழ்கின்றோம். இவைகளை நாம் சாதாரண கண் பார்வை கொண்டு காண முடியாது. ஒரு நுண்ணுயிர் கூர்மையான பென்சில் நுனியினை விட ஆயிரம் மடங்கு சிறியவை. பல வகை வடிவம் கொண்டவை. அதிக சக்தி வாய்ந்த மைக்ராஸ்கோப் மூலமாகவே இதனை காண முடியும். இவை மண், ஆறு, செடி, கொடிகள், விலங்கினங்கள், குழாய் நீர், அன்றாடம் நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் கீ போர்ட், படுக்கை, நம் உடல் என எங்கும் பரந்து விரிந்துள்ளன. வாழ்கின்றன. நம் உடலில் உள்ள செல்களை காட்டிலும் இந்த நுண்ணுயிர்கள் அதிகம் என்றால் அவைகளின் எண்ணிக்கையினை பார்த்துக் கொள்ளுங்கள். இந்த நுண்ணுயிர்களை பாக்டீரியாக்கள் என்ற வகையில் குறிப்பிடுகின்றோம். ஏன் இவை நம்மோடு இருக்கின்றன.

    நமது சருமம், மூக்கினுள், வாய், தொண்டை, உணவுப் பாதை, பெண் பிறப்புறுப்பு இவற்றில் இவை நிரந்தர குடியுரிமை பெற்று வாழ்கின்றன. அதிகமாக இந்த பாக்டீரியா நுண்ணுயிர்கள் குடலில் உள்ளன. அநேகமாக இவை பாதிப்பினை கொடுப்பதில்லை. பாதிப்பு ஏற்பட்டால் கிருமி பாதிப்பு, நோய் பாதிப்பு என்று கூறுகின்றோம்.

    பிறக்கும் பொழுதே நாம் இந்த நுண்ணுயிர்களை கையோடு கூட்டிக் கொண்டுதான் வருகின்றோம். குழந்தையாக பிறக்கும் பொழுது தாயின் பிறப்பு உறுப்பில் இருந்து வெளியே வரும் பொழுது அம்மாவிடம் இருந்து இந்த நுண்ணுயிர்களை குழந்தைகள் பெற்று விடுகின்றன. அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகள் தாயின் சருமம் மூலமும் நுண்ணுயிர்களை பெற முடியும்.

    குழந்தை இயற்கை முறையில் பிறக்கும் பொழுது தாயின் பிறப்பு பாதையில் இருந்து லாக்டோபேசிலி என்ற நல்ல நுண்ணுயிரினை பெற்றுக் கொள்கின்றது. இது குழந்தையின் பால் செரிமானத்திற்கு நன்கு உதவுவதால் குழந்தையின் ஆரோக்கியம் வலுப்பெறுகின்றது. அறுவை சிகிச்சையின் மூலம் பிறக்கும் குழந்தை தாயின் சருமம் மற்றும் சுற்றுப்புற சூழ்நிலை இவற்றின் மூலம் இந்த நுண்ணுயிர்களை பெறுகின்றது.

    எல்லா பிறந்த குழந்தைகளுமே டாக்டர், நர்சு, சுற்றுப்புற சூழ்நிலை இவற்றில் இருந்து நுண்ணுயிர்களை பெறுகின்றது. தாய்பால் அருந்தும் குழந்தை தாயின் சருமத்தில் இருந்து நல்ல நுண்ணுயிரினை பெறுவது குழந்தைக்கு ஆரோக்கியத்தினை நிறையவே கொடுக்கின்றது. இவை எல்லாம் இறைவன் செயல் அல்லது இயற்கை செயல் என எப்படி எடுத்துக் கொண்டாலும் நாம் பெறும் ஆரோக்கிய கிடங்குகள். மேலும் தாய்பால் குழந்தையின் ஆரோக்கியத்திற்காக மட்டுமே இறைவன் கொடுத்த கருணை. பின் வளர்ந்து வரும் குழந்தை உணவின் மூலமும் நுண்ணுயிர்களை பெறுகின்றது. பாக்டீரியா, நுண்ணுயிர் என்றாலே நாம் நோய் பாதிப்பு ஏற்படுத்தும் கெட்ட அல்லது தீய பாக்டீரியாக்களை மட்டுமே நினைக்கின்றோம்.

    உண்மையில் நம் சருமம் மூக்கு, தொண்டை என பல பகுதிகளில் இருக்கும் அநேக நுண்ணுயிர்கள் தீய பாக்டீரியாக்கள் உள் நுழைவதனை எதிர்த்துப் போராடுகின்றன. தீய நுண்ணுயிர்களை நாம் நோய் கிருமிகள் என்கின்றோம். தீய கிருமிகள் நம்மை தாக்க முயற்சிப்பதும் அதை நல்ல கிருமிகள் தடுக்க முயல்வதும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. சுகாதாரம், நல்ல உணவு, மருந்துகள் இவற்றின் உதவியோடே மனித சமுதாயம் தீய கிருமிகளிடம் இருந்து காப்பாற்றப்படுகின்றன.

    இந்த தீய நுண்ணுயிர்களை தடுக்கும் விதமாகத்தான் கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது, குளிப்பது, பற்களை சுத்தமாக வைத்துக் கொள்வது என பல சுகாதார முறைகள் வலியுறுத்தப்படுகின்றன.

    நல்ல பாக்டீரியாக்கள் குறைந்து தீய பாக்டீரியாக்கள் அதிகரித்தால் நோய் தாக்குதல் ஏற்படுகின்றது. உதாரணமாக அதிக இனிப்புகள், சாக்லேட் கேக் போன்றவைகளை சாப்பிடும் பொழுது அவை பற்களில் ஒட்டி ஈறு, பல் இவற்றினை அழிக்கின்றது. இதன் காரணமாகவே இரு வேளை பல் துலக்குவது, வாய் நன்கு கொப்பளிப்பது போன்ற பழக்கங்களை மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். அதிக சர்க்கரை உணவுகளை தவிர்க்க சொல்கின்றனர்.

    மருத்துவ முன்னேற்றம் எப்படி வளர்ந்து கொண்டு இருக்கின்றதோ அதே போன்று பல வகை நோய்களின் பாதிப்பும் வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இதற்கான பல முக்கியமான காரணங்களில் ஒன்று மாறுபட்ட உணவு முறையும் ஆகும். விதவிதமான இனிப்புகள், துரித உணவுகள், கொழுப்பு வகைகள் இவை அனைத்துமே உடலை வெகுவாய் பாதிக்கின்றன. காய்கறி வகைகள், விதைகள், நார் சத்து இவை நமது குடலில் உள்ள நல்ல நுண்ணுயிர்களுக்கு தேவை. இவ்வகை உணவுகளை பிரிபயோடிக் என்பர். இவை உடல் நல முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுபவை. பிரிபயோடிக் என்பவை நமக்கு நன்மை பயக்கும் நுண்ணுயிர்கள். செரிமானத்திற்கு உதவும், செரிமான கோளாறுகளை நீக்கும். தயிர், மோர், இட்லிமாவு இவை நல்ல பாக்டீரியா நிறைந்த உணவுகள் ஆகும். சில நேரங்களில் உடல் பாதிப்பின் காரணமாக ஆன்டிபயாடிக் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் பொழுது நல்ல பாக்டீரியாக்களும் அழியக்கூடும். ஆகவேதான் ஆன்டிபயாடிக் எடுத்துக் கொள்ளும் பொழுது சிலருக்கு வயிற்றுப் போக்கு ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம். ஆகவேதான் மருத்துவர்கள் சிலருக்கு குறிப்பிட்ட முறையில் ஆன்டிபயாடிக் மருந்துகளை மேலும் சில சத்துகளோடு சேர்த்து அளிப்பார்கள். சிலர் தன் மனம் போனபடி ஆன்டிபயாடிக் மருந்துகளை மேலும் கொண்டு பல்வேறு பாதிப்புகளுக்கும் ஆளாகின்றனர்.

    வைரஸ், பூஞ்சை தொற்று போன்ற பாதிப்புகளுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் உதவாது. ஆக ஜலதோஷம், புளூ போன்ற பாதிப்புகளுக்கு தாங்களே ஏதோ ஒரு மருந்தினை எடுத்துக்கொள்வது, அதையே தொடர்ந்து செய்வது போன்றவை தற்கொலைக்கு சமம். இதனையே மற்றவர்களையும் சாப்பிட பரிந்துரைப்பது கொலைக்கு சமம். இனியாவது இத்தகு விஷப் பரீட்சைகளை செய்யாது இருப்போம்.

    அதிக கொழுப்பு, சர்க்கரை இதனை தவிர்க்க வேண்டும். காய்கறிகள், விகிதாசார உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும். சாப்பிடும் உங்கள் உணவு வானவில் போல் ஏழு நிறங்களில் இருந்தால் நல்லது. சிகப்பு, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு நிறங்களாவது கண்டிப்பாய் இருக்க வேண்டும்.

    நிறைந்த ஆய்வுகளுக்கு பிறகு வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பாக இக் கட்டுரை அளிக்கப்பட்டுள்ளது. இனியாவது நாம் நல்ல பாக்டீரியாக்களோடு ஆரோக்கியமான வாழ்வினை மேற்கொள்வோம். பொதுவில் நல்ல நுண்ணுயிர் குறைந்து, தீயது அதிகரிக்கும் பொழுது அவர்கள் சற்று உடல் சோர்வாக இருப்பது, எரிச்சலாக இருப்பது மனச்சோர்வுடன் இருப்பது ஆகியவற்றை வெளிப்படுத்தலாம். உங்கள் உடன் இருப்பவர்கள், உங்களது உயர் அதிகாரிகள் அல்லது உங்களது உதவியாளர்கள் இந்த அறிகுறிகளை வெளிப்படுத்தினால் டீ, காபிக்கு பதிலாக சுத்தமான மோர் அவருக்கு வாங்கிக் கொடுக்கலாமே!

    மேலும் சில குறிப்புகளை பார்ப்போமா?

    வாய்:- இந்த வாயால் ஏற்படும் பிரச்சினைகள் ஏராளம். சதா ஏதாவது மென்று கொண்டு இருக்கும். கட்டுப்பாடில்லாமல் பேசும். அத்தோடு மட்டுமா? 700 வகைக்கும் மேற்பட்ட பாக்டீரியாக்கள் இருக்கின்றன. சில வகைகள் நல்லவை. பல வகைகள் பல்லையும், ஈறுகளையும் பாதிப்பதாகவே இருக்கின்றன. இவைகளை எப்படி நீக்குவது. தவிர்ப்பது.

    காலை, இரவு இரண்டு வேளையும் பல் துலக்க வேண்டும்.

    ஈறுகளை விரல் கொண்டு மசாஜ் செய்து கொப்பளிக்க வேண்டும். நாக்கினை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். தெரிந்த சாதாரண செய்திதான். ஆனால் அதனை கடை பிடிக்காததன் காரணமே பல்லை காப்பாற்றுவது படாத பாடாகிவிட்டது.

    தீய பாக்டீரியாக்கள் பல் இடைவெளிகளில் புகுந்து சந்தோஷமாய் ஒரு ஊரினையே உருவாக்கி விடும். பிளாசிங் என்ற முறையினை பல் மருத்துவர் மூலம் நன்கு கற்று கடைபிடிக்க வேண்டும்.

    வருடம் இரு முறையாவது பல் பரிசோதனை அவசியமே.

    குடல்:- குடலினை பொறுத்தவரை ஏராளமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றின் சாராம்சமாக சில முக்கிய குறிப்புகளை பார்ப்போம்.

    * வயிறு உப்பிசம், வயிறு வலி, கழிவு வெளியேற்றத்தில் சில பிரச்சினைகள், நெஞ்சுவலி, சரும சிவப்பு திட்டு, வாய் நாற்றம், இப்படி பல அறிகுறிகள் இருக்கலாம். சில நோய்களைக் கூட இந்த தீய பாக்டீரியாக்களின் விளைவாக குறிப்பிடுகின்றனர் ஆய்வாளர்கள்.

    * சுத்தமான தேன், மஞ்சள், அன்னாசி பழம், இஞ்சி, பூண்டு, தயிர், மோர் போன்ற உணவுகளை கிருமி நாசினி உணவாக குறிப்பிடுகின்றனர்.

    இதுபோல் பச்சை மாங்காய், மாம்பழம், முட்டை கோஸ் இவற்றினையும் குறிப்பிடுகின்றனர்.

    இவற்றினை அடிப்படையாக வைத்துதான் நார்சத்து உணவு, பல வண்ண காய்கறிகள், உடற்பயிற்சி, சர்க்கரையினை தவிர்த்தல், தேவையான அளவு தூக்கம், இவைகள் பரிந்துரைக்கப்படுகின்றது.

    அதே போன்று அன்றாடம் குளித்தல், கைகளை சுத்தம் செய்தல், துவைத்த ஆடைகளை அணிதல் எனவும் சிறு வயதிலிருந்து குழந்தைகளை பழக்குகின்றோம்.

    நட்பு என்ற பெயரில் ஒரே தட்டில் நண்பர்களோடு உண்பது, ஒருவர் கடித்த உணவு துண்டினை அடுத்தவர் எடுத்துக் கொள்வது, ஒரு ஸ்பூன் கொண்டு பலரும் அதில் உண்பது என்பது அன்பால் அள்ளி அள்ளி தீய கிருமிகளை மற்றவர்களுக்கு தருகின்றோம் என்பதை உணர்ந்து அதனை தவிர்ப்போமாக.

    Next Story
    ×