search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    தஞ்சை பெரிய கோவில்
    X
    தஞ்சை பெரிய கோவில்

    தமிழ் வரலாற்றின் பொற்காலம்

    1000 வருடங்களுக்கு முன் தென்னிந்தியாவை ஆண்ட மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் அரசன் ஏன் வடஇந்தியாவை நோக்கி படையெடுக்காமல், சிவனுக்கு மிகப்பெரிய ஆலயம் கட்டினான்? என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.
    ராஜராஜ சோழனின் ஆட்சி காலம் (985-1014) தான் தமிழ் வரலாற்றின் பொற்காலம். பொருளாதாரம், கட்டிடக்கலை, சிற்பக்கலை, வணிகம், நாகரிகம், விவசாயம், கலாச்சாரம், உணவு முறை, போர்ப்படை என்று அனைத்திலும் சோழ தேசம் மற்ற தேசத்தை காட்டிலும் பல மடங்கு முன்னேறி இருந்தது.

    தென்னிந்தியா முழுவதையும் தன் குடைக்கீழ் கொண்டு வந்த சோழனுக்கு தன் நாட்டின் வளர்ச்சியையும் நாகரிகத்தையும் காலத்தால் அசைக்க முடியாதபடி வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும் என்று ஒரு ஆசை.

    அந்த ஆசையின் முழு வடிவமே இன்று உலகம் வியக்கும் க்ரானைட் கற்களால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில். இந்த பதிவு கோவில் கட்டப்பட்ட தொழில்நுட்பத்தை பற்றியது அல்ல அதை விட மிக கடினமான மற்ற துறைகளைப் பற்றியது.

    தஞ்சை பெரிய கோவில் தன் காலத்தில் இருந்த மற்ற கோவில்களை விட 40 மடங்கு பெரிய கோவில். கோவில் கட்டுமானத்தில் மரம் இல்லை. சுடு செங்கல் இல்லை பூராங்கல் இல்லை மொத்தமும் நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த உயர்ந்த கிரானைட் கற்கள் மட்டுமே.
     
    1000 வருடங்களுக்கு முன் தஞ்சை கோவில் கட்டும்போது அது தான் இந்தியாவின் மிகப்பெரிய விமானம் கொண்ட கோவில். விமானம் முழுக்க க்ரானைட் கற்களை சிற்பமாக செதுக்க வேண்டும்.

    80 டன் கலசத்தை வேறு ஏற்ற வேண்டும் என்றால் மிகப்பெரிய சாரத்தை கோவில் விமானம் சுற்றி கட்ட கட்டிடக்கலை நிபுணர்கள் எவ்வளவு துல்லியமாக ஆராய்ந்து இருப்பார்கள், இது போக எவ்வளவு கயிறு, மரக்கட்டை வேண்டும் என்றும் தீர்மானிக்க வேண்டும். இவை அனைத்திற்கும் சிறந்த கணித அறிவு நிச்சயம் தேவைப்பட்டு இருக்கும். தஞ்சை பெரிய கோவிலை கட்ட 7 வருடம் ஆனது என்று வரலாறு சொல்கிறது.

    கோவிலை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கைதிகளின் உதவியுடன் தான் கட்டியுள்ளனர். கைதிகள் மட்டும் இல்லை மக்களின் உதவியும் கூட. கைதிகளை வைத்து தானே கட்டினார்கள் என்று ஏளனமாக நினைக்க வேண்டாம். சற்று யோசித்து பாருங்கள், எந்த அளவுக்கு சோழ காவல் படை செயல்பட்டு இருந்தால் 7 வருடமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பரம எதிரி நாட்டு கைதிகளை வைத்து தஞ்சை தலைநகரில் வேலை வாங்கி இருப்பார்கள்.

    மக்களிடம் இருந்தும் எதிர்ப்பு வராமல் பார்த்து கொள்ளவேண்டும் என்றால்  மனித வள மேலாண்மையை மிக நேர்த்தியாக நடைமுறைபடுத்தியிருக்கிறார்கள் என்பதற்கு ஓங்கி உயர்த்து நிற்கும் கோவில் தான் சாட்சி.

    சரி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கைதிகள், ஆயிரம் ஆயிரம் யானைகள், குதிரைகள்,1000க்கும் மேற்பட்ட சிற்பிகள், ஓவியர்கள், ஆசாரிகள், கொல்லர்கள், நடன கலைஞர்கள், சமையல் வேலையாட்கள், கற்களை பிளக்கும் வீரர்கள் என ஒரு மாபெரும் படைக்கும் 7 வருடம் உணவு வழங்க வேண்டும் என்றால் தொடர்ச்சியாக 7 வருடம் சோழதேசத்தில் விவசாயம் மற்றும் பொருளாதாரம் தங்குதடை இல்லாமல் இருந்திருக்க வேண்டும். ஒரு முழு படைக்கும் தேவையான மருத்துவ வசதியும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும்.

    இது மட்டுமா 7 வருடம் கோவில் கட்ட தேவையான பொருட்செலவை ஈடுகெட்ட தொடர்ச்சியாக போர்களும் நடந்து இருக்கவேண்டும், வெற்றியும் அடைந்து இருக்கவேண்டும். அதே நேரத்தில் எதிரிநாட்டு படையெடுப்பையும் தடுத்து இருக்க வேண்டும்.

    தஞ்சையை சுற்றி 50 கிலோமீட்டருக்கு க்ரானைட் கற்கள் கிடையாது. கோவில் கட்ட தேவையான கற்களை திருச்சிக்கு சற்று தெற்கே 50 கி மீ தூரத்தில் உள்ள நார்த்தாமலையில் இருந்து கொண்டு வரவேண்டும் என்றால் சோழதேசத்தின் சாலைகள் மற்றும் போக்குவரத்தும் மிக மிக தரமாகவும் சீராகவும் இருந்திருக்க வேண்டும்.

    இது எல்லாவற்றையும் சமாளித்தலும் மிகப்பெரிய பூதம் ஒன்று உள்ளதே, அது தான் அரசியல். எந்த ஒரு சாம்ராஜ்யமாக இருந்தாலும் அரசியல் குழப்பம் இருக்காமல் இருக்காது. 7 வருடம் அரசியல் குழப்பம் எதுவும் நடக்காமல் மிக நேர்த்தியாக ஆட்சி செய்திருக்க வேண்டும்.

    சோழ அரசியலில் பெண்களின் பங்கு கவனிக்கத்தக்கது. ஆண்மகன்கள் கோவில் வேலையில் மும்முரமாக இருக்க பெண்கள்  அரசு இயந்திரத்தை திறன்பட இயக்கியுள்ளனர் என்று வரலாறு சொல்கிறது.

    1000 வருடம் 6 நிலநடுக்கத்தை கண்டும் அசராமல் நிற்கும் தஞ்சை பெரிய கோவில் வெறும் ஆலயம் இல்லை.

    மருத்துவம்,பொருளாதாரம், கட்டிடக்கலை, சிற்பக்கலை,வணிகம், நாகரிகம், விவசாயம், கலாச்சாரம்,  உணவு முறை, போர்ப்படை என்று அனைத்திலும் மிக மிக சிறந்து விளங்கிய நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் எடுத்துக்காட்டு.

    -சி.பி. சரவணன்
    Next Story
    ×