என் மலர்tooltip icon

    கதம்பம்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வயிறும் வாழ்வும்...

    கூழ், களி, சோறு வகையறாக்களை மாற்றி பூரி, பரோட்டா, நாண் என முதல் கட்ட அழிவைத் தொடங்கி வைத்தது கடந்த நூற்றாண்டு...
    எதைப் பார்த்தாலும்
    தின்று விடவேண்டுமென
    நப்பாசைக் கொள்கிறது
    நாக்கு

    வாய் வழியாய்ப் போன உணவு
    வயிற்றுக்குள் என்னானது?
    வயிற்றுக்கு என்னாவது?
    என்னும் ஆராய்ச்சி குறித்து
    அணுவளவேனும் கவலையில்லை
    மக்களுக்கு!

    சட்டைப் பையைக் காலி செய்வதும்
    வயிற்றுப் பையை நிரப்புவதும்தான்
    வாழ்நாள் வேலையென
    வகுத்துக்கொண்டாயிற்று

    எது கிடைத்தாலும்
    பிதுங்கப் பிதுங்கத் தின்றுவிட்டு
    பின்விளைவுகள் குறித்துப்
    பின்னால் பார்த்துக் கொள்வதென்பது
    ‘‘மெனு நீதி’’யாக மாறிப்போனது

    கோப்புப்படம்


    எப்படிப்பட்டத்
    தவறுகளைச் செய்தாலும்
    சமாதானம் சொல்லிக்கொள்வதில்
    சற்றும் சளைக்காதது மனம்

    வயிற்றுக்காகத்தானே
    இவ்வளவு பாடும் படுகிறோம்!
    உண்மைதான்
    ஆனால்... வயிற்றை
    என்ன பாடு படுத்துகிறோம்?

    உலகமய உணவுக் கழிவின்
    நடமாடும் குப்பைத் தொட்டிகளாய்
    நாகரிக மனிதர்கள் மாறி
    நாலு தலைமுறை கழிந்துவிட்டது

    பெயர் வைக்கக் கூட
    முடியாத அளவிற்குப்
    பெருகிவிட்டன நோய்கள்!

    கூழ், களி, சோறு
    வகையறாக்களை மாற்றி
    பூரி, பரோட்டா, நாண் என
    முதல் கட்ட அழிவைத்
    தொடங்கி வைத்தது கடந்த நூற்றாண்டு!

    பிசா, பர்கர், நூடுல்ஸ்
    இன்னும் ஏராளமான
    துரிதவகை உணவுகள் என
    அடுத்த கட்ட அழிவை ஆராதிக்கிறது
    இந்த நூற்றாண்டு!

    உலக வணிகர்களின்
    கொள்ளை லாப
    அறுவடைக் களமாய் ஆகிவிட்டது
    மக்களின் வயிறும் வாழ்வும்


    -பாவலர் வையவன்
    Next Story
    ×