search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி தண்ணீர் கடைமடை பாசனத்துக்கு போகவில்லை - ராமதாஸ் குற்றச்சாட்டு
    X

    காவிரி தண்ணீர் கடைமடை பாசனத்துக்கு போகவில்லை - ராமதாஸ் குற்றச்சாட்டு

    காவிரி தண்ணீர் கடைமடை பாசனத்துக்கு போகவில்லை என்றும் அரசின் கவன குறைவால் வீணாக கடலில் கலக்கிறது என்றும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார். #Ramadoss #Cauvery
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பதைப் போல மேட்டூர் அணை நிரம்பி வழிந்தும் கூட காவிரி கடைமடை பாசனப் பகுதிகளுக்கு காவிரி நீர் சென்றடையாததால் குறுவை நெல் பயிர்களுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை. அதேநேரத்தில் மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் திறந்து விடப்பட்ட தண்ணீரில் பெரும் பகுதி விவசாயத்துக்குப் பயன்படாமல் வங்கக் கடலில் கலந்து வீணாகியிருக்கிறது.

    மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீர் அடுத்த 3 நாட்களில் கல்லணைக்கும், அடுத்த ஒரு வாரத்தில் அனைத்து கடைமடை பகுதிகளையும் சென்றடைவது வழக்கமாகும்.

    அதாவது மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் அடுத்த 10 நாட்களுக்கு அனைத்து காவிரி பாசனப் பகுதிகளுக்கும் சென்றடைந்தாக வேண்டும். வழக்கத்தை விட அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டால் இன்னும் கூடுதலாக கடை மடைப் பாசனப் பகுதிகளை சென்றடைந்து விடும்.



    ஆனால், இம்முறை மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்றுடன் 13 நாட்களாகியும் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலுள்ள கடைமடை பாசனப் பகுதிகளை சென்றடையவில்லை. காவிரி ஆறு பூம்புகார் கடலில் கலப்பதற்கு முந்தைய இடமான நாகை மாவட்டம் மேலையூர் கடைமடைத் தேக்கத்திற்கு கடந்த ஜூலை 29-ந் தேதியே தண்ணீர் வந்து விட்ட போதிலும், அதற்கு முன்பாக உள்ள கடைமடைப் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் இன்னும் சென்றடையவில்லை.

    அதேநேரத்தில் கடந்த சில நாட்களில் மட்டும் காவிரி மற்றும் கொள்ளிடம் வழியாக கிட்டத்தட்ட 16 டி.எம்.சி. வீணாக கடலில் கலந்துள்ளது. இதை விட மிகக்கேவலமான நீர் மேலாண்மை வேறு எங்கும் கடைபிடிக்கப்படாது.

    தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளாக குறுவை சாகுபடி நடைபெறவில்லை. நடப்பாண்டிலாவது மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப்பட்டால் கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடைய வசதியாக காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளிலும், பாசனக் கால்வாய்களை தூர்வார வேண்டும் என பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    கடந்த மாதம் 19-ந் தேதி மேட்டூர் அணை திறப்பு விழாவில் தடுப்பணைகள் கட்டுவது குறித்த முதல்வரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து பா.ம.க. சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையிலும் தடுப்பணைகளை கட்டவும், கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், மக்கள் நலனில் அக்கறையற்ற அரசு அதை செய்யாததன் விளைவு தான் உழவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    மேட்டூர் அணையிலிருந்து கடந்த வாரம் வினாடிக்கு 76,611 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போதே காவிரிப் பாசன மாவட்டங்களுக்கு தண்ணீர் சென்றடையாத நிலையில், நேற்று முதல் வெறும் 19,000 கன அடி மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் நிலையில் நிச்சயமாக கடைமடைக்கு தண்ணீர் சென்றடையாது. இதனால் மிகவும் மோசமான பாதிப்புகள் ஏற்படும்.

    இதைத் தடுக்க காவிரி கிளை ஆறுகள் மற்றும் பாசனக் கால்வாய்களை தூர்வாரி சீரமைப்பதுடன், அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட வேண்டும். இதற்கெல்லாம் மேலாக காவிரி படுகைகளில் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் பாதுகாக்க வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் தடுப்பணைகளை கட்ட அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Ramadoss #Cauvery

    Next Story
    ×