search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    50 பொருட்கள் மீதான வரி விரைவில் குறைக்கப்படும் - பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு
    X

    50 பொருட்கள் மீதான வரி விரைவில் குறைக்கப்படும் - பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு

    28 சதவீதம் வரி விதிக்கப்படும் 50 பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி. வரி விரைவில் குறைக்கப்படும் என்று மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.
    சென்னை:

    ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை அமலுக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, சென்னையில் ஓராண்டு நிறைவு விழா நேற்று நடந்தது. இந்த விழாவுக்கு மத்திய நேரடி வரி விதிப்பு மற்றும் சுங்கத்துறை முதன்மை ஆணையர் சி.பி.ராவ் தலைமை தாங்கினார்.

    விழாவை மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    ஜி.எஸ்.டி. வரியை அறிமுகப்படுத்திய போது, அனைத்து பொருட்களின் விலை உயரும், பொருட்களை தயாரிக்கும் மாநிலங்கள் வருவாய் இழப்பை சந்திக்கும், பாமரமக்கள் பயன்படுத்தும் சாதாரண பொருட்களின் விலை பலமடங்கு உயரும் என பலவிதமான பிரசாரங்கள் நடந்தன.

    அவற்றை பொய்யாக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து, வரி ஏற்றத்தாழ்வை சரி செய்தன. 200 பொருட்களுக்கு, 28 சதவீத வரி வசூலிக்கப்பட்டு வந்தது. பல முறை நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சிலில், பல பொருட்கள் மீதான வரி 5 சதவீதமாகவும், பல பொருட்களுக்கு வரி விலக்கும் அளிக்கப்பட்டன.

    சாதாரண வணிகர்களும் தங்களது கணக்குகளை எளிமையான முறையில் தாக்கல் செய்ய முடிந்தது. இதன் மூலம் அரசுக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய் முந்தைய ஆண்டுகளை விட ஓராண்டில் கூடுதலாக கிடைத்துள்ளது. வரி வசூலிக்கும் போது நாம் நடந்து கொள்ளும் முறையில் தான் வரி செலுத்துவோர்கள் தானாக முன்வந்து வரி செலுத்துவார்கள். ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு சரக்குகளை கொண்டு செல்ல பதிவு செய்யும் இ-வே பில் குறித்து சரக்குகளை கொண்டு செல்வோருக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    இதுவரை 27 தடவை ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடந்துள்ளது. இதில், பல்வேறு பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இன்னும் 28 சதவீதம் வரி விதிக்கப்படும் 50 பொருட்களின் மீதான வரி விரைவில் அதாவது சில வாரங்களில் குறைக்கப்படும். பிற நாடுகளை விட, நம் நாட்டு ஜி.எஸ்.டி. முறை பெரும் சாதனை படைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது, ‘ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை வெற்றிகரமாக ஓராண்டு நிறைவடைந்துள்ளது. தமிழகத்திலும் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. ஜி.எஸ்.டி. அறிமுகத்துக்கு பின் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி.யை நடைமுறைப்படுத்துவதில் தமிழகமும் சிறப்பான மாநிலமாக திகழ்கிறது. அத்துடன் மத்திய அரசிடமிருந்தும் குறைவான இழப்பீடையே பெறுகிறது’ என்றார்.

    பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறும்போது, “தமிழகத்தில் ஜி.எஸ்.டி. அறிமுகம் செய்து 9 மாதங்களில், 27 ஆயிரம் கோடி ரூபாய் வரி மூலம் வருவாய் கிடைத்துள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானம் ஆகியவை மாநிலத்தின் முக்கிய வருவாய் அளிக்கும் பொருட்கள். எனவே அவற்றை ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டு வர முடியாது. அதே சமயம் மத்திய அரசு இவற்றின் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும். மேலும், தமிழகத்துக்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் வரி இழப்பு 3 சதவீதம் தான். வரும் ஆண்டுகளில் இதுவும் முற்றிலுமாக குறைய வாய்ப்பு உள்ளது” என்றார்.

    இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு புதுச்சேரி மண்டல சுங்கத்துறை தலைமை ஆணையர் அஜித்குமார், தமிழக வணிக வரித்துறை ஆணையர் டி.வி.சோமநாதன், வரி மற்றும் பதிவுத்துறை முதன்மை செயலர் கே.பாலச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ஜி.எஸ்.டி. ஆணையர் ராஜேஷ் சோடியா வரவேற்றார். இணை ஆணையர் மானச கங்கோத்ரி கட்டா நன்றி கூறினார்.

    Next Story
    ×