search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி ஆணையத்தை ஏற்க மறுக்கும் கர்நாடகத்தில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் - ராமதாஸ்
    X

    காவிரி ஆணையத்தை ஏற்க மறுக்கும் கர்நாடகத்தில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் - ராமதாஸ்

    காவிரி ஆணையத்தை ஏற்க மறுக்கும் கர்நாடகத்தில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Ramadoss #CauveryManagmentCommission

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரியில் தமிழகம் அதன் பங்கு தண்ணீரைப் பெற கர்நாடகம் எத்தகைய முட்டுக்கட்டைகளைப் போடும் என்று எதிர்பார்க்கப்பட்டதோ, அவற்றை கர்நாடக முதல்வர் குமாரசாமி அரங்கேற்றத் தொடங்கி இருக்கிறார். நாடாளுமன்றத்தில் விவாதித்து ஒப்புதல் பெற்ற பிறகு தான் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்திருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் குமாரசாமி கூறியிருப்பது அதைத் தான் காட்டுகிறது.

    11 ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு இம்மாதம் தான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. இது நடுவர் மன்றம் பரிந்துரைத்த காவிரி மேலாண்மை வாரியத்தை விட அதிகாரம் குறைந்த அமைப்பு தான் என்றாலும் கூட, காவிரி சிக்கலுக்கு ஏதாவது ஒரு வகையில் தீர்வு ஏற்பட்டால் நல்லது என்ற எண்ணத்தில் அந்த ஏற்பாட்டை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. இது ஒருவகையில் தியாகம் ஆகும். தங்களின் உரிமைகளை ஓரளவு இழந்துள்ள தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களே இந்த ஏற்பாட்டை ஏற்றுக் கொள்ளும் போது, இதனால் பயனடையக் கூடிய மாநிலமான கர்நாடகம் இதை ஏற்று செயல்படுத்தியிருக்க வேண்டும்.

    ஆனால், வழக்கம் போலவே கர்நாடக வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியிருக்கிறது. ‘‘ கர்நாடக அணைகளின் நீர்மட்டத்தை 10 நாட்களுக்கு ஒருமுறை அளவீடு செய்வதற்கான அதிகாரமும், கர்நாடக உழவர்கள் எத்தகைய பயிர்களை பயிரிட வேண்டும் என்று அறிவுறுத்தும் அதிகாரமும் மேலாண்மை ஆணையத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இது அறிவியல்பூர்வ மற்ற நடவடிக்கை; இது எங்களுடைய விவசாயிகளுக்கு இழைக்கப்படும் தீங்கு ஆகும்’’ என்று குமாரசாமி கூறியிருக்கிறார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி, நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரையும் அவர் சந்தித்திருக்கிறார். மற்றொரு புறம் பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக நீர்ப்பாசன மந்திரி சிவக்குமார், காவிரி ஆணையத்திற்கு கர்நாடக உறுப்பினரை உடனடியாக நியமிக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

     


    கர்நாடக முதல்-அமைச்சர் குமாரசாமி, நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் ஆகிய இருவரும் சொல்ல விரும்பும் செய்தி ஒன்று தான். காவிரி மேலாண்மை ஆணையத்தை கர்நாடகம் ஏற்றுக் கொள்ளாது என்பதைத் தான் அவர்கள் வேறு வேறு வார்த்தைகளில் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

    தமிழகத்தின் உரிமைகளை மறுப்பதற்காக சட்டத்திற்கும், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் எதிரான நடவடிக்கைகளை கர்நாடகம் மேற் கொண்டு வரும் நிலையில், தமிழக ஆட்சியாளர்களோ காவிரி உரிமையை வென்றெடுத்து விட்டதாகக் கூறி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

    காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் போது, ஆட்சியாளர்கள் வெற்றி விழா கொண்டாடுவது மிகவும் குரூரமான நகைச் சுவை ஆகும். அணைகளில் 56 டி.எம்.சி தண்ணீர் இருந்தாலும் கூட தமிழகத்துக்கு தர மறுக்கும் கர்நாடகத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவோ, தண்ணீர் பெற்றுத் தரும்படி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவோ முடியாத அரசு தமிழகத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒன்று தான். இவர்களை வரலாறும், மக்களும் மன்னிக்க மாட்டார்கள்.

    காவிரி பிரச்சினை குறித்த தீர்ப்பை செயல்படுத்தும் பொறுப்பை மத்திய அரசுக்கு தான் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது என்பதால், தமிழகத்திற்கு நீதி வழங்கும் கடமையை மத்திய அரசு தான் நிறைவேற்ற வேண்டும். கர்நாடக அணைகளை அதன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளக்கூடிய காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தல் ஆகிய நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

    இது குறித்த தங்களின் உத்தரவுகளை கர்நாடகம் ஏற்க மறுத்தால், அரசியல் சட்டத்தின் 365ஆவது பிரிவின்படி அங்கு அரசியல் அமைப்புச் சட்டப்படியான கடமைகளை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக அறிவித்து, கர்நாடகத்தின் நிர்வாகப் பொறுப்பை ஆளுனரிடம் ஒப்படைத்து கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பது உள்ளிட்ட கடமைகளை மத்திய அரசே நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

    மற்றொரு அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் எதிர்காலத் தூண்கள் என்று நம்பப்பட்டு வரும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் பெரும் பான்மையினரால் தூண்களை பிடிக்காமல் நிற்க முடியாது என்ற அளவுக்கு அவர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளனர் என்ற உண்மை இதயத்தைச் சுடுகிறது.

    சென்னையிலும், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனைக் கட்டமைப்பு ஆலமரம் போல பரந்து விரிந்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கதாகும்.

    போதைப் பொருள் விற்பனை குறித்து காவல்துறைக்கு தகவல் வருவோரின் விவரங்களை ரகசியமாக பாதுகாப்பதுடன் அவர்களுக்கு ரூ.10,000க்கும் குறையாமல் ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட வேண்டும். பள்ளி நிர்வாகங்களும், கல்லூரி நிர்வாகங்களும் மாணவர்களின் பெற்றோர்கள், காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி போதைப் பழக்கத்திலிருந்து மீட்டெடுத்தல்/ சிக்காமல் இருத்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

    தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போதை மருந்துப் பழக்க மீட்பு மையங்கள் அமைக்கப்பட வேண்டும். போதையில்லா தமிழகத்தை உருவாக்க அரசு, காவல்துறை, கல்வி நிறுவனங்கள், பெற்றோர் என அனைவரும் பாடுபட வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss #CauveryManagmentCommission

    Next Story
    ×