search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணப்பட்டுவாடாவை தடுக்க வங்கி கணக்குகள் கண்காணிப்பு: ராஜேஷ் லக்கானி
    X

    பணப்பட்டுவாடாவை தடுக்க வங்கி கணக்குகள் கண்காணிப்பு: ராஜேஷ் லக்கானி

    ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காக வங்கி கணக்குகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு, ராஜேஷ் லக்கானி அளித்த பேட்டி வருமாறு:-

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக 3 செலவின பார்வையாளர்கள், ஒரு போலீஸ் பார்வையாளர், பொதுப் பார்வையாளர் ஒருவர் என 5 பார்வையாளர்கள் டிசம்பர் 4-ந் தேதியன்று வருகின்றனர். மீதமுள்ள 4 பேர் அதன் பின்னர் தொகுதிக்கு வருவார்கள்.

    ஒரு ஷிப்டுக்கு 6 குழு என்ற விகிதத்தில் 18 சோதனை குழுக்களை தொகுதியில் பணி அமர்த்தி இருக்கிறோம். ஒரு குழுவில், மாநில அரசுப் பணியாளர் 2 பேர், 2 போலீசார், ஒரு வீடியோ படப்பிடிப்பாளர் ஆகிய 5 பேர் இடம்பெற்றிருப்பார்கள்.

    பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அந்த வகையில், ஆர்.கே.நகர், ராயபுரம், பெரம்பூர் உள்பட சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த வங்கிகளில் உள்ள கணக்குகளை கண்காணித்து வருகிறோம்.

    வங்கி கணக்குகளில் திடீரென்று நடக்கும் பணப்புழக்கம், அதிக எண்ணிக்கையில் 2 ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளை செலுத்துவது போன்ற சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகளை எங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று வங்கிகளை அறிவுறுத்தி இருக்கிறோம். அதுபோல் மது பாட்டில்களை ஒட்டுமொத்தமாக கொள்முதல் செய்தால் அதுபற்றி தெரிவிக்க டாஸ்மாக் நிர்வாகத்திடம் கூறியிருக்கிறோம்.

    வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு எந்திரம் ஆகியவை ஏற்கனவே உள்ளன. யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் வி.வி.பி.ஏ.டி. எந்திரங்கள் பெங்களூரு பெல் கம்பெனியில் இருந்து வரவுள்ளன. புதிய 320 எந்திரங்கள் லாரி மூலமாக 30-ந் தேதி (நாளை) இங்கு வந்து சேரும்.

    ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஆயிரத்து 100 பேர், பட்டியலில் இருந்து பெயரை தவறாக நீக்கிவிட்டதாக கூறி, மீண்டும் தங்கள் பெயரை சேர்க்கக்கோரி விண்ணப்பித்துள்ளனர். 650 பேர் பெயரை சேர்க்கும்படி புதிதாக விண்ணப்பித்துள்ளனர். இந்த இடைத்தேர்தலில் 1.1.17 அன்று 18 வயது பூர்த்தியானவர்கள், வாக்காளர்களாக கருதப்படுகிறார்கள்.

    இந்த தொகுதியை பொறுத்தவரை 28-ந் தேதியோடு (நேற்று) பெயர் சேர்க்கும் நடவடிக்கைகள் முடிந்துவிட்டன. டிசம்பர் 4-ந் தேதியன்று இறுதி வாக்காளர் துணைப்பட்டியல் வெளியிடப்படும்.

    ஆர்.கே.நகர் தொகுதிக்குள், முக்கிய சாலை வழியாக வெளியூர் வாகனங்கள் செல்வதில் பிரச்சினை இருக்காது. ஆனால் வீடுகள் இருக்கும் பகுதிகளுக்கு சென்றால், அங்கு செல்லும் காரணம் குறித்து ரோந்துப்பணியில் உள்ள அதிகாரிகள் விசாரிப்பார்கள். துணை ராணுவம் இன்னும் ஓரிரு நாட்களில் தொகுதிக்கு வந்துவிடும். அதன் பிறகு சோதனைச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும். குடியிருப்பு பகுதிகளில் 200 கண்காணிப்பு கேமராக்களை நிறுவுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×