search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்கா ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: ராமதாஸ் அறிக்கை
    X

    குட்கா ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

    குட்கா ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டை உலுக்கிய குட்கா ஊழல் தொடர்பாக புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் குட்கா உற்பத்தி செய்யப்பட்டதை உறுதி செய்யும் வகையில் எம்.டி.எம் என்ற குட்கா நிறுவனம் ரூ.9 கோடி கலால் வரி செலுத்தியிருப்பதாக ஜி.எஸ்.டி. புலனாய்வுப் பிரிவு தெரிவித்திருக்கிறது. ஆனால், மறுபுறம் குட்கா ஊழல் குறித்த விசாரணையை கையூட்டு தடுப்புப் பிரிவு முடக்குவது கண்டிக்கத்தக்கது.

    வருமான வரித்துறை ஆய்வு நடத்திய குட்கா நிறுவனத்தின் பங்குதாரரான மாதவராவ் என்பவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், காவல் உயரதிகாரிகள் மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.39.91 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. மாதவராவிடம் வருமான வரித்துறை நடத்திய விசாரணையிலும் இதை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.

    இத்தகைய சூழலில் தான் தமிழகத்தில் சட்ட விரோதமாக குட்கா தயாரித்து விற்பனை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்வதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக சுங்கம் மற்றும் கலால் துறையின் கண்காணிப்புப் பிரிவு தலைமை இயக்குனரக உயரதிகாரி அளித்த பேட்டியில், ‘‘தமிழ்நாட்டில் குட்கா தயாரித்து விற்கப்பட்டது உண்மை. எம்.டி.எம். நிறுவனம் தானாக முன் வந்து கலால் வரி செலுத்தியதன் மூலம் இது உறுதியாகியுள்ளது’’ என்று கூறியிருக்கிறார்.

    தமிழகத்தில் குட்கா உற்பத்தி செய்து விற்கப்பட்டது உறுதியாகியுள்ளது; அதற்கு துணை போனதாக தமிழகத்திலுள்ள மத்திய, மாநில அரசு அதிகாரிகள் 17 பேர் மீது தமிழக காவல் துறையின் கையூட்டு தடுப்புப் பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    குட்கா உற்பத்தி மற்றும் விற்பனையை கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக அமைச்சருக்கும், தமிழக காவல் துறையின் உயரதிகாரிகளுக்கும் கோடிக்கணக்கில் கையூட்டு கொடுக்கப்பட்டதாக சம்பந்தப்பட்ட குட்கா நிறுவனத்தின் உரிமையாளரே ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கையூட்டுத் தடுப்புப் பிரிவு தயங்குவது ஏன்? என்பது தான் எங்களின் வினாவாகும்.



    சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், காவல் துறை உயரதிகாரிகள் இருவரும் கையூட்டு வாங்கியதற்கு அசைக்க முடியாத ஆதாரங்கள் இருக்கும் போதிலும் கூட, இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு மறுக்கிறது.

    இந்த வழக்கை விசாரிக்கும் தமிழக காவல்துறையின் கையூட்டுத் தடுப்புப் பிரிவோ, வருமான வரித்துறை சோதனை குறித்த மூல ஆதாரங்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ள கருவிகள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டால் மட்டுமே விசாரணையை தொடர முடியும் என்று கூறி குட்கா ஊழல் விசாரணையை முடக்கி வைத்திருக்கிறது. இது குற்றவாளிகளை தப்ப வைக்கும் முயற்சி.

    குட்கா ஊழலில் புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாலும், கையூட்டுத் தடுப்புப் பிரிவின் விசாரணை திருப்தி அளிக்கவில்லை என்பதாலும் இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவது மட்டுமே உண்மையை வெளிக் கொண்டு வரவும், குற்ற வாளிகளை தண்டிக்கவும் வழி செய்யும். அதற்கான ஆணையை தமிழக அரசு பிறப்பிப்பதுடன், அமைச்சர் விஜயபாஸ்கரையும் பதவி நீக்க வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

    Next Story
    ×