search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் ராஜ்நாத் சிங்குடன் அமைச்சர்கள் சந்திப்பு
    X

    டெல்லியில் ராஜ்நாத் சிங்குடன் அமைச்சர்கள் சந்திப்பு

    தமிழக மக்கள் நலனுக்காகவே நாங்கள் மத்திய மந்திரிகளை சந்தித்து பேசினோம் என்று தம்பிதுரை எம்.பி. கூறினார்.
    சென்னை:

    தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். நேற்று அவர்கள் மத்திய மந்திரிகள் அருண்ஜெட்லி, நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார்கள். அவர்களுடன் தம்பிதுரை, மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் சென்றிருந்தனர்.

    இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை அவர்கள் இன்று காலை சந்தித்துப் பேசினார்கள். சுமார் 15 நிமிடம் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். இந்த சந்திப்பு முடிந்ததும் தம்பிதுரை எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    அம்மாவின் ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது என்பதை உறுதிபடுத்தும் வகையில் நாங்கள் செயல் பட்டு வருகிறோம். நேற்று நாங்கள் மத்திய மந்திரி அருண்ஜெட்லியை சந்தித்து பேசினோம்.

    அப்போது தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு தர வேண்டிய ரூ.17 ஆயிரம் கோடியை உடனே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதற்கு அருண் ஜெட்லி பரிசீலித்து முடிவு எடுப்பதாக உறுதியளித்தார்.

    நாங்கள் மத்திய மந்திரிகளை சந்திப்பதில் எந்தவித அரசியலும் இல்லை. மரியாதை நிமித்தமாகத்தான் இன்று நாங்கள் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினோம். அவருக்கு நாங்கள் வாழ்த்துகள் கூறினோம்.

    ஆனால் மத்திய மந்திரிகளை நாங்கள் சந்திப்பதில் அரசியல் இருப்பதாக எதிர்க்கட்சியினர் சொல்கிறார்கள். இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம்.

    தமிழக மக்கள் நலனுக் காகவே நாங்கள் மத்திய மந்திரிகளை சந்தித்து பேசி வருகிறோம். மத்திய அரசுடன் நாங்கள் இணக்க மான சுமூகமான போக்கை கடைபிடிக் கிறோம். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்துதான் தமிழ்நாட்டு மக்களுக்கு உதவ முடியும்.

    நீட் தேர்வு பிரச்சினையை பொருத்தவரை தமிழக அரசு சரியாக செயல்பட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு காரணமாக இடை யூறு ஏற்பட்டுவிட்டது.

    தமிழ்நாட்டு மக்களின் மன உணர்வுக்கு ஏற்ப செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் கோர்ட்டு உத்தரவால் இடையூறு ஏற்பட்டு விட்டது.

    தி.மு.க.வுடன் தினகரன் அணி சேர வேண்டும் என்று சுப்பிரமணியசாமி கற்பனையில் ஏதேதோ பேசுகிறார். அவரது கற்பனைக்கு பதில் அளிக்க நான் தயாராக இல்லை. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கூட்டத்தில் பொதுக் குழுவை கூட்ட முடிவு செய்துள்ளோம். அதில் நல்ல முடிவுகள் எடுக்கப்படும்.

    இரட்டை இலை என்பது அ.தி.மு.க.வின் சின்னம். எம்.ஜி.ஆர். உருவாக்கிய சின்னம். ஜெயலலிதா பாதுகாத்த சின்னம்.

    தற்போது தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா வின் ஆட்சிதான் நடக்கிறது. ஆட்சியும், கட்சியும் ஒன்றாகவே உள்ளது. எந்த பிளவும் இல்லை.

    டெல்லி வந்துள்ள தமிழக அமைச்சர்களை தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகள் சந்திக்க மறுத்து விட்டனர் என்று நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. அது தவறான செய்தியாகும். நாங்கள் தேர்தல் கமி‌ஷனுக்கு போக வேண்டும் என்ற அவசியம் இல்லை.

    தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்துப் பேச நாங்கள் யாரும் நேரம் கேட்கவில்லை. யூகத்தின் அடிப்படையில் தவறான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

    எங்களுக்குள் சில சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம் யாரிடமும் இல்லை.

    நாங்கள் இப்போது ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம்.

    இவ்வாறு தம்பிதுரை கூறினார்.
    Next Story
    ×