search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வயதானவர்களுக்கான மருத்துவ காப்பீடு
    X
    வயதானவர்களுக்கான மருத்துவ காப்பீடு

    வயதானவர்களுக்கான மருத்துவ காப்பீடு… கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

    நமது பெற்றோருக்கு, பொருத்தமான ஒரு சிறந்த காப்பீடு எடுப்பதன் மூலம், நாம் நிம்மத்தியாக இருக்கலாம். பெற்றோர்களுக்கும் தேவைப்படும் போது சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கலாம்.
    வயதான பெற்றோருக்கான பொருத்தமான சிறந்த மருத்துவ காப்பீடு என்பது அவர்களுக்கான சிறந்த பரிசு என்றால் மிகையாகாது. நாம் வசிக்கும் இடத்தை கருத்தில் கொண்டு மருத்துவ காப்பீட்டு தொகை நிர்ணயிப்பது சிறந்தது. ஆட்டோ ரென்யூவல் முறையை தேர்வு செய்வதால், புதுப்பிக்கும் தேதியை தவற விடும் வாய்ப்பு இருக்காது. வரி சேமிப்பு மற்றும் வருடாந்திர உடல நல பரிசோதனைகள் போன்ற பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன

    நம்மை ஆளாக்கிய பெற்றோர்கள் என்றுமே போற்றுதலுக்கு உரியவர்கள்.  பெரும் தியாகங்களை செய்துதான் பெற்றோர்கள் குழந்தைகளை ஆளாக்குகின்றனர். அவர்கள் முதுமை காலத்தில் அவர்களை சிறப்பாக கவனித்துக் கொள்வது நமது கடமை.

    அதே சமயம் மருத்துவ செலவுகள், நடுத்தர வர்த்தகத்தினர் சமாளிக்க முடியாத அளவில் தான் உள்ளது. நகரத்தில் மருத்துவ மனைக்குள் நுழைந்தாலே நமது சேமிப்புகள் அனைத்தும் காலியாகி விடும்.

    அப்படிப்பட்ட நிலையில் நமது பெற்றோருக்கு, பொருத்தமான ஒரு சிறந்த காப்பீடு எடுப்பதன் மூலம், நாம் நிம்மத்தியாக இருக்கலாம். பெற்றோர்களுக்கும் தேவைப்படும் போது சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கலாம்.

    நமது வாழ்க்கையையே நமக்காக அர்பணித்த பெற்றோருக்கு, நாம் செய்யும் சிறந்த உதவி இதுவாகத்தான் இருக்கும்.

    நமது வயதான பெற்றோர்களுக்கு மருத்துவ காப்பீடு எடுக்கும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    1. நாம் தேர்ந்தெடுக்கும் மருத்துவ காப்பீட்டு நிறுவனம், நம்பிக்கைக்கு உரிய நிறுவனமாக இருக்க வேண்டும். அதாவது அவசர காலத்தில் சேவை வழங்குவதிலும், க்ளைகளை செட்டில் செய்வதிலும் பிரச்சனை ஏதும் ஏற்படுத்தாத மருத்துவ காப்பீட்டு நிறுவனமாக இருக்க வேண்டும்.

    2. வயது அதிகம் ஆக ஆக, மருத்துவ காப்பீட்டை தொடங்குவது கடினம், பல காப்பீட்டு நிறுவனங்கள்  அதிக வயதானவர்களுக்கு புதிதாக காப்பீடு வழங்குவதில்லை. அதனால் நமது பெற்றோருக்கு, சிறிது முன் கூட்டியே மருத்துவ காப்பீட்டை எடுத்து விட வேண்டும். அது தான் பாதுகாப்பானது.

    3. மருத்துவ காப்பீட்டை சரியான நேரத்தில் புதுப்பிக்க வேண்டும். அதை தவற விடக்கூடாது. அப்பொழுது தான் அவர்கள் வாழ் நாள் முழுவதற்கும் அந்த காப்பீட்டை தொடர முடியும். தேவைப்பட்டால், ஆட்டோ ரென்யூவல் முறையை தேர்வு செய்யவும். இதனால் காப்பிட்டை புதுப்பிப்பதை தவற விடும் வாய்ப்பு இல்லை.  

    4. காப்பீடு எடுப்பதற்கு முன்னதாக இருக்கும் நோய்களுக்கு எந்த அளவிற்கு கவரேஜ் இருக்கும், அதற்கான விதிமுறைகள் என்ன என்பதை விரிவாக கேட்டு அறிய வேண்டும்.

    5. புற்றுநோய், நீரிழிவு நோய், இதய நோய், பக்கவாதம் போன்ற பல நோய்கள் உணர்ச்சி ரீதியாக மட்டுமல்லாமல் நிதி ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நோய்கள் ஆகும். மேலும் இதற்கு நீண்ட கால பராமரிப்பு தேவைப்படுகிறது. எனவே, இதை  கருத்தில் கொண்டு அதற்கேற்ற வகையிலான காப்பீட்டை எடுப்பதன் மூலம் உங்களையும் உங்கள் பெற்றோர்களையும் மன உளைச்சலில் இருந்தும்  நிதிச் சுமையிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

    6. நீங்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்து, காப்பீட்டுத் தொகையை தேர்ந்தெடுக்கவும். பெருநகரத்தை பொருத்தவரை மருத்துவமனை செலவுகள் அதிகமாக இருக்கும்.  அதனை மனதில்வைத்துக் கொண்டு, காப்பீடு செய்யப்பட்ட தொகையை அதிகரித்து கொள்ளலாம்.  இதனால் மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால் நீங்கள்  நிம்மதியாக பெற்றோருக்கு சிறந்த சிகிச்சை அளிக்கலாம்.

    உங்கள் பெற்றோருக்கான பொருத்தமான சிறந்த காப்பிட்டு திட்டம் என்பது,  நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் சிறந்த பரிசு என்றால் அது மிகையில்லை. இது அவர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வரி சேமிப்பு மற்றும் வருடாந்திர உடல நல பரிசோதனைகள் போன்ற பல்வேறு நன்மைகளையும் பெறலாம்.
    Next Story
    ×