search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பிரசவத்திற்கு பின்பு பெண்களுக்கு எழும் இரண்டு கேள்விகள்
    X
    பிரசவத்திற்கு பின்பு பெண்களுக்கு எழும் இரண்டு கேள்விகள்

    பிரசவத்திற்கு பின்பு பெண்களுக்கு எழும் இரண்டு கேள்விகள்

    பிரசவம் ஆன பெண்கள் பலருக்குள்ளும், முக்கியமான இரண்டு கேள்விகள் எழுகின்றன. அந்த கேள்விகள் என்ன? அவை இரண்டுக்குமான பதில்களை இங்கே பார்க்கலாம்.
    ஒன்று, ‘பிரசவம் முடிந்து அடுத்து மாதவிலக்கு சுழற்சி ஏற்படும் முன்பே மீண்டும் கர்ப்பமாகி விடுகிறார்களே, அதற்கான காரணம் என்ன?’ என்பது. இன்னொன்று ‘பிரசவத்திற்கு பின்பு எந்த கருத்தடை முறையை கையாளவேண்டும்’ என்பது. அவை இரண்டுக்குமான பதில்களை இங்கே பார்க்கலாம்.

    பிரசவத்திற்கு பின்பு பெண்களின் இனப்பெருக்க உறுப்புகள் மீண்டும் பழைய நிலைய அடைய, மூன்று மாதங்கள் வரை தேவைப்படும். ஆனாலும் மூன்று, நான்கு வாரங்களில் மீண்டும் தாம்பத்திய உறவை மேற்கொள்ளலாம் என்று நவீன மருத்துவம் குறிப்பிடுகிறது. ஆனால் ஆயுர்வேத மருத்துவம் மூன்று மாத இடைவெளி தேவை என்று சொல்கிறது.

    பிரசவத்திற்கு பின்பு முதல் முறையாக கருமுட்டை வெளியாகி, கர்ப்பம் தரிக்கவில்லை என்றால் மாத சுழற்சி மீண்டும் தொடங்கும். பிரசவத்திற்கு பின்பு முதல் மாதவிலக்கு ஏற்படுவதற்கு முன்பு, முதல் கருமுட்டை உருவாகும் காலத்தில் தாம்பத்தியம் மேற்கொண்டால் மீண்டும் தாய்மைக்கான வாய்ப்பு உருவாகிவிடலாம். அதனால் பிரசவமான பெண்கள் முதல் மாதவிலக்கு ஏற்படுவதற்கு முன்பு தாம்பத்திய உறவு வைத்துக்கொண்டால் கருத்தடை முறை எதையாவது கடைப்பிடிப்பது நல்லது.

    பிரசவத்திற்கு பின்பு கர்ப்பத்தடையை ஏற்படுத்திக்கொள்வதற்காக பெண்கள் பல்வேறு முறைகளை மேற்கொள்கிறார்கள். ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரான் ஹார்மோன் மாத்திரைகளை பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகிறார்கள். கர்ப்பத் தடைக்கு ஊசி மருந்துகளையும் பயன்படுத்தலாம். ஆனால் இவைகள் சில பக்கவிளைவுகளை உருவாக்கக்கூடியவை. சிலர் இவைகளை பயன்படுத்திவிட்டு, மீண்டும் தாய்மையடைய விரும்பினால், தாய்மை பல வருடங்களாக தள்ளிப்போகும் சூழ்நிலையும் உருவாகிறது.

    தாய்ப்பால் புகட்டும் தாய்மார்கள் ‘காப்பர்-டி’ பயன்படுத்திக்கொள்ளலாம். ஆண்களும், பெண்களும் அவரவருக்குரிய கருத்தடை உறைகளையும் பயன்படுத்தலாம். காப்பர்-டி பொருத்துவதாக இருந்தால், அதற்கு முன்பு டாக்டரிடம் ஆலோசனை பெறுங்கள். ஏனென்றால் முன்பு ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிட்டிருந்தால் அதனால் ஒருவேளை காப்பர்-டி பொருத்தும் இடத்தில் பக்கவிளைவுகளின் பாதிப்புகள் தென்படலாம். அதை டாக்டர் பரிசோதித்த பின்பு காப்பர்-டி பொருத்துவது நல்லது. அடுத்து குழந்தையே வேண்டாம் என்று முடிவு செய்திருந்தால் பெண்ணுக்கு ‘டியூபல்லிகேஷன்’ அறுவை சிகிச்சையோ, ஆணுக்கு ‘வாசக்டமி’ அறுவை சிகிச்சையோ செய்துகொள்ளலாம்.
    Next Story
    ×