search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கர்ப்பிணிகள்
    X
    கர்ப்பிணிகள்

    ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால்.. கர்ப்பிணிகள் என்ன செய்யணும்..

    ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், கர்ப்பிணி பெண்கள் என்ன செய்வது என்பதை பற்றி விளக்கமாக பேசுகிறார், சென்னையைச் சேர்ந்த டீனா அபிஷேக். இவர் குழந்தைப் பேறு மற்றும் பாலூட்டுதல் பயிற்சியாளர்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் வருகிற 14-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் பொதுவாக பலரும் பாதிக்கப்பட்டாலும் கர்ப்பிணிகள் முறையாக சிகிச்சை பெற மருத்துவ மனைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படலாம் என்ற பேச்சு தற்போது நிலவுகிறது.

    அப்படி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், கர்ப்பிணி பெண்கள் என்ன செய்வது என்பதை பற்றி விளக்கமாக பேசுகிறார், சென்னையைச் சேர்ந்த டீனா அபிஷேக். இவர் குழந்தைப் பேறு மற்றும் பாலூட்டுதல் பயிற்சியாளர். அதே சமயம் மனநல ஆலோசகராகவும் பணியாற்றுகிறார்.

    ஊரடங்கு உத்தரவு காலத்தில், புதிதாக கர்ப்பம் தரித்தால் என்ன செய்வது?

    ஊரடங்கு உத்தரவு மேலும் சில காலம் நீட்டிக்கப்பட்டால், அதனால் பெரிதும் பாதிக்கப்பட இருப்பது புதுமண தம்பதிகள்தான். மருந்து கடைகளில் கிடைக்கும் கர்ப்ப பரிசோதனை உபகரணங்களை கொண்டு கர்ப்பம் தரித்திருப்பதை கண்டுபிடித்து விடலாம் என்றாலும், அதை மருத்துவமனையில் உறுதிப்படுத்தும் வாய்ப்பு குறைவு. அதேசமயம், கர்ப்ப காலத்தில் மனைவியை எப்படி கவனித்து கொள்வது, எந்தெந்த உணவு பொருட்களை சேர்ப்பது, தவிர்ப்பது என்பதிலும் குழப்பம் ஏற்படும். இப்படி ஒரு சூழலில் நீங்கள் சிக்கியிருந்தால் கவலைப்படாதீர்கள். உடனடியாக மருத்துவமனைக்கு செல்லவேண்டிய கட்டாயமும் இல்லை.

    தலைவலி, உடல் சோர்வு, முதுகு வலி, வாந்தி, உடல் நடுக்கம் போன்றவை இந்தச் சூழலில் இயல்பானது. பிறப்பு உறுப்பில் எரிச்சல், ரத்தக் கசிவு, தொடர் வயிற்றுவலி போன்றவை இருக்கும்பட்சத்தில் மருத்துவரை கட்டாயம் அணுகவேண்டும். கருவில் இருக்கும் குழந்தையை பரிசோதிக்க என்.டி.ஸ்கேன் பயன்படுகிறது. குழந்தை வளர்ச்சியில் இருக்கும் குறைபாடுகளை இந்த ஸ்கேன் மூலம் கண்டறியலாம். இதை கரு உருவாகிய 12 வாரங்களுக்குள் செய்வது நல்லது. அதனால் ஊரடங்கு உத்தரவு காலத்தில் கர்ப்பம் தரித்தாலும், கருவின் ஆரோக்கியத்தை பரிசோதிக்க, 12 வாரங்கள் உள்ளன. அதனால் பதற்றப்படாமல் இருங்கள்.

    ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் சூழல் உருவானால், மருத்துவர்களை ஆன்லைனில் தொடர்பு கொள்ளலாம். நிறைய நகரங்களில் ‘டாக்டர் ஆன் கால்' முறையில், மருத்துவர்கள் வீடு தேடி வந்து மருத்துவம் பார்க்கிறார்கள். இல்லையேல், அரசு ஏற்படுத்தி கொடுத்திருக்கும் ‘102' நடமாடும் மருத்துவ வாகன சேவையை பயன்படுத்துங்கள்.

    4 முதல் 6 மாத கர்ப்பிணிகளுக்கு சில டிப்ஸ்?

    கர்ப்பிணி பெண்களுக்கு முதல் 3 மாதத்தில் ஒரு தடுப்பூசியும், அடுத்த 2 மாத காலத்திற்குள் ஒரு தடுப்பூசியும் போடப்படுவது வழக்கம். எனவே அந்த தடுப்பூசியை அந்த மாத காலத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் போடலாம். அதேபோலதான் குழந்தையின் உடல் வளர்ச்சியை பரிசோதிக்க பயன்படும், அனாமலி ஸ்கேனையும் அந்த மாத காலத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் செய்து பார்க்கலாம். அதனால் அவசர உதவிக்கு மட்டும் மருத்துவமனை சென்றால் போதுமானது.

    இரும்பு சத்து, புரத சத்து அதிகம் உள்ள உணவு பொருட்களை எல்லா கால கர்ப்பிணிகளும் உட்கொள்ளவேண்டும். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது. 15 நிமிட நடைபயிற்சியும் அவசியம்.

    பிரசவ காலத்தை நெருங்குபவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது என்ன?

    35 வாரத்தை கடந்தவர்கள் கவனமாக இருக்கவேண்டும். இவர்களுக்குதான் மருத்துவ ஆலோசனை அடிக்கடி தேவைப்படும். ஏனெனில் இந்த காலக்கட்டத்தில்தான் பிரசவத்திற்கான அறிகுறிகள் அதிகமாக வெளிப்படும். 36-வது வாரம், 37-வது வாரத்தில் இருக்கும் கர்ப்பிணிகளுக்கு ஒரு நாளில் இரு முறை (நீண்ட இடைவெளியில்) வயிற்று வலி ஏற்படுவது இயல்பானது. ஆனால் வயிற்று வலியும், இடுப்பு வலியும் தொடர்கதையாகும் பட்சத்தில், மருத்துவரை சந்திக்க வேண்டும்.

    குழந்தையின் நகர்வையும், ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை கவனிக்கவேண்டும். 30 வார கர்ப்பிணிகளுக்கு ஒரு நாளில் 3 நகர்வுகளும், 36 வாரத்தை கடந்தவர்களுக்கு ஒரு மணிநேரத்தில் 6 நகர்வுகளும் இருக்கவேண்டும். குழந்தையின் நகர்வு வழக்கத்தைவிட குறையும்பட்சத்திலும் அது சிக்கலாக முடியலாம். சிலருக்கு பனிக்குடம் உடைந்துவிடும். அப்போதுகூட நீங்கள் பதற்றப்பட வேண்டாம். முடிந்தவரை விரைவாக மருத்துவமனை செல்ல முற்படுங்கள். பனிக்குடம் உடைந்ததில் இருந்து, அடுத்த 2 மணிநேரத்திற்குள் மருத்துவமனை சென்றுவிடவேண்டும்.

    யூ-டியூப் மூலம் மருத்துவ தகவல் பெறுவது நல்லதா?

    உடல்நிலை ஒவ்வொருவருக்கும் வேறுபடும். சிலருக்கு கர்ப்ப காலத்தில் வாந்தி-மயக்கம் அதிகமாக இருக்கும். சிலருக்கு வெகு குறைவாகவே இருக்கும். அதனால் நேரடி மருத்துவ ஆலோசனையே சிறந்தது. கிடைக்காத பட்சத்தில், தொலைப்பேசி மூலமாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. மேலும் யூ-டியூப் சேனல்களில் உண்மை தன்மையை ஆராய்வது மிகமிக முக்கியம்.

    டீனா அபிஷேக்
    Next Story
    ×