search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    ஜிபே, பேடிஎம் மூலமாக நடக்கும் மோசடிகள்...
    X

    'ஜிபே', 'பேடிஎம்' மூலமாக நடக்கும் மோசடிகள்...

    • ‘பாஸ்வேர்ட்’, ‘கியூ.ஆர்’ குறியீடு போன்றவற்றை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவேண்டாம்.
    • செயலிகளைப் பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

    நீங்கள் 'ஜிபே' (GPay), 'பேடிஎம்' (Paytm), 'போன்பே' (PhonePe)போன்ற யு.பி.ஐ. (UPI) 'பேமெண்ட்' செயலிகளைத்தொடர்ந்து பயன்படுத்துகிறவரா? இந்த செயலிகள் நமது பணப் பரிவர்த்தனையை மிக எளிதாக்கியிருக்கின்றன என்பது உண்மை. அதேவேளையில் இந்த செயலிகளைப் பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் குறித்து நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

    மும்பையை சேர்ந்த 27 வயது பெண் ஆஷா ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார். தோழியின் பிறந்த நாள் கேக்கை வடிவமைக்க 'விஸ்கி' பாட்டில் தேவைப்பட்டதால், ஆன்லைனில் ஒரு 'ஒயின்' கடையைத் தொடர்புகொண்டார் ஆஷா. 'ஒயின் ஷாப்'பில் இருந்த மோகன், கூகுள் பேயில் 'கியூ.ஆர்'குறியீடு மூலம் பணம் அனுப்பச் சொன்னார். அதன்படி அந்த பெண் ரூ.550 செலுத்தினார். அடுத்து 'டெலிவரி எக்ஸிகியூட்டிவ்' ஒருவர் விரைவில் உங்களை அழைப்பார் என்று மோகன் தெரிவித்தார்.

    அதன்படி, சில நிமிடங்களில் திலீப் என்பவர் ஆஷாவை அழைத்தார். மதுவை 'டெலிவரி' செய்ய பதிவு கட்டாயம் என்று கூறிய திலீப், 'கூகுள் பேயை' 'ஓப்பன்' செய்து அதில் ரசீதின் எண் "19,051" என்பதைப் பதிவிடுமாறு கூறினார். ஆஷா அப்படி பதிவிட்டதைத் தொடர்ந்து அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.19 ஆயிரத்து 51 'டெபிட்' செய்யப்பட்டுவிட்டது. குழப்பமடைந்த ஆஷா, திலீப்பிடம் இது பற்றி கூறியபோது, ​​"அதைப் பற்றி கவலைப்படவேண்டாம். எங்கள் கணினியில் பிழை ஏற்பட்டுள்ளது. முழு செயல்முறையையும் மீண்டும் செய்தால் சரியாகிவிடும்" என்று கூறினார். அந்த பெண் மீண்டும் அப்படி செய்தவுடன், அவரது கணக்கில் இருந்து மேலும் ரூ.19 ஆயிரத்து 51 மீண்டும் 'டெபிட்' செய்யப்பட்டது.

    பணத்தை திருப்பித்தருமாறு திலீப்பிடம் அந்த பெண் கேட்டபோது, ​​கணினியில் சிக்கல் இருப்பதாகவும், அந்த தொகையை வரவு வைப்பதற்கு பதிலாக, அந்த 'புரோகிராம்' 'டெபிட்' செய்துவிடுவதாகவும் நொந்துபோய் பேசுவதுபோல் பேசி, மேலும் ஏமாற்றியுள்ளார் திலீப். "உங்களது பணத்தைத் திரும்பப்பெறுவதற்காக உங்கள் வங்கி 'டெபிட்' அல்லது 'கிரெடிட்' கார்டு விவரங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்" என்று கேட்ட திலீப்பிடம் தனது கார்டின் 'சிவிவி'(CVV) எண் மற்றும் கார்டு காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்களை பகிர்ந்துள்ளார் ஆஷா.

    அடுத்து, "உங்கள் வங்கி பரிவர்த்தனை வரம்பு குறைவாக உள்ளதால் பணத்தை திரும்ப செலுத்த முடியவில்லை" என்று திலீப் சொன்னவுடன் தனது வங்கி பரிவர்த்தனை வரம்பை 'ஆன்லைன்' மூலமாகவே அதிகரித்துள்ளார் ஆஷா. இதையடுத்து மறுமுனையில் இருந்த 'சைபர்' கிரிமினல்கள், பல்வேறு பரிவர்த்தனைகள் மூலமாக ஆஷாவின் கணக்கில் இருந்து ரூ.5.35 லட்சத்தை திருடி விட்டனர். தான் ஏமாற்றப்பட்டதை தாமதமாக உணர்ந்த ஆஷா 'சைபர் கிரைம்' போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

    சென்னை போன்ற பெருநகரங்களில் 'ரியல் எஸ்டேட்' துறையிலும் 'சைபர்' கிரிமினல்கள் புகுந்துவிட்டனர். வீடு வாடகைக்கு விடப்படும் என்று ஆன்லைனில் விளம்பரம் வெளியிடும் வீட்டு உரிமையாளர்களை குறிவைத்து இந்த கும்பல் செயல்படுகிறது. இந்த கும்பலில் ஒருவன், வீட்டு உரிமையாளரை செல்போனில் அழைத்துப் பேசுவான். வீடு எங்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது என்றும், அட்வான்ஸ் தொகையை உங்களுக்கு 'ஜிபே' மூலமாக அனுப்பி வைக்கிறோம் என்றும் ஆசை காட்டுவான்.

    "முதலில் உங்களுக்கு சாம்பிளுக்காக 'ஜிபே' மூலமாக ஒரு ரூபாய் அனுப்பியுள்ளேன். அந்த ஒரு ரூபாயை உங்கள் வங்கி கணக்கில் இருந்து இந்த 'லிங்க்'-க்கு திருப்பி அனுப்புங்கள். அதைவைத்து உங்களுக்கு 'அட்வான்ஸ்' தொகையை மொத்தமாக அனுப்பிவிடுவேன்" என்று கூறி, ஒரு 'லிங்க்'-கை அனுப்புவான். அந்த 'லிங்க்' வீட்டு உரிமையாளரின் வங்கி கணக்கு விவரங்களை திருடிவிடும் 'மால்வேர்' ஆகும். அதையும், உரிமையாளர் சொல்லும் தகவல்களையும் வைத்து வீட்டு உரிமையாளரின் வங்கி சேமிப்பு முழுவதையும் கொள்ளை அடித்துச் செல்கிறது இந்த 'சைபர்' கிரிமினல் கும்பல்.

    இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்கவேண்டுமானால், 'ஜிபே', 'பேடிஎம்' போன்ற 'யு.பி.ஐ.' 'பேமெண்ட்' செயலிகளை மிகுந்த எச்சரிக்கையுடன் பயன்படுத்துங்கள். 'பேமெண்ட்' செயலிகளின் 'பாஸ்வேர்ட்', 'கியூ.ஆர்' குறியீடு போன்றவற்றை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவேண்டாம். நீங்கள் வீட்டு உரிமையாளராக இருந்தால், வாடகைக்கு வருபவரை நேரில் பார்க்காமலும், அவரது சுய விவரங்களை சோதிக்காமலும் 'ஆன்லைன்' முறையில் பணம் வாங்கவோ, கொடுக்கவோ வேண்டாம்.

    முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. முனைவர் மு.ரவி

    Next Story
    ×