search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    பெண்களின் ஆசையில் ஏற்பட்ட அதிசய மாற்றங்கள்
    X

    பெண்களின் ஆசையில் ஏற்பட்ட அதிசய மாற்றங்கள்

    • காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள் மனித வாழ்க்கையில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
    • கூட்டுக்குடும்பத்தின் நிழலை பெண்கள் அனுபவிக்க விரும்புகிறார்கள்.
    • தங்கள் குழந்தைகளை வளர்க்க பாட்டியும், தாத்தாவும் தேவை என்று சொல்கிறார்கள்.

    மக்களுடைய வாழ்க்கையில் பத்து வருடங்களில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இன்று போல் அன்று அத்தனை பேரும் வீட்டிற்குள் ஆளுக்கொரு செல்போனுடன் ஆன்லைனில் மூழ்கிக் கிடக்கவில்லை. `ஆப்'பில் ஆர்டர் செய்து ஆப்பிளை வரவழைக்கவும் இல்லை. அன்று ஓட்டலுக்கு சென்று உணவு சாப்பிடுவது என்பது தித்திப்பான மனநிலையை தந்தது. இன்று நினைத்த நேரத்தில் ஓட்டலுக்கு சென்று புசிப்பது வழக்கமாகிவிட்டது. டவுனில் இருக்கும் தியேட்டருக்கு சென்று சினிமா பார்ப்பதுகூட அப்போது ஒரு திருவிழா போன்றுதான் இருந்தது. இப்போது அந்த ஆர்வத்தையும் காலம் அடித்துச்சென்றுவிட்டது. இப்படி பொதுவான விஷயங்களில் ஏற்பட்ட தலைகீழான மாற்றங்கள் தென்னிந்தியர்களின் குடும்ப கட்டமைப்புகளிலும் எதிரொலிக்கத்தான் செய்கிறது.புதிய சர்வே வெளிப்படுத்தும் ரகசியம்

    படம் மாடல்

    `தனிக்குடித்தனத்திற்கு பெண்கள் ஆசைப்படுவார்கள். மருமகள்களுக்கு, மாமியாரை பிடிக்காது' என்றுதான் பொதுவாக பெண்களை பற்றி சொல்வார்கள். ஆனால் இன்றைய பெண்களின் மனநிலை அதற்கு நேர்மாறாக இருந்துகொண்டிருக்கிறது. கூட்டுக்குடும்பத்தின் நிழலை பெண்கள் அனுபவிக்க விரும்புகிறார்கள். தங்கள் குழந்தைகளை வளர்க்க பாட்டியும், தாத்தாவும் தேவை என்றும் சொல்கிறார்கள்.

    இது தொடர்பாக தென்னிந்திய பெருநகரங்களில் வசிக்கும் தம்பதிகளிடம் எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில், 51 சதவீத பெண்கள் மட்டுமே கணவருடன் ஒன்றாக வசிப்பது தெரியவந்திருக்கிறது. கணவர் இன்னொரு இடத்தில் வேலைபார்ப்பது அதிகரித்துவருகிறது. 40 சதவீதம் பெண்கள், மாமியார் வீட்டில் அல்லது தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் வாழும் இளம் தாய்மார்கள் `மாமியார் அல்லது அம்மாவுடன் சேர்ந்து வசிப்பது தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கியிருக்கிறது' என்று சொல்கிறார்கள்.

    இந்த சர்வேயில் பங்குபெற்ற இளந்தாய்மார்களில் ஒருவர் ''எங்கள் குழந்தைகள் அவர்களது தாத்தா, பாட்டியுடன் வளர்வது மிக நல்லது என்பதை எங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறோம். என் கணவர் மும்பையில் வேலைபார்க்கிறார். நான் டெல்லியில் வேலைபார்த்தபடி இரட்டைக் குழந்தைகளுடன் வசித்தேன். எங்கள் குழந்தைகளை `டே கேர்' ஒன்றில் தினமும் விட்டுவிட்டு செல்வேன். பின்பு நான் வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகரீதியான பயணங்களை மேற்கொள்ளவேண்டியிருந்தது. அந்த நாட்களில் மாலையில் குறிப்பிட்ட நேரத்தில் டே கேர் சென்று குழந்தைகளை அழைத்துவர என்னால் முடியவில்லை.

    இத்தகைய நெருக்கடிகளால் எங்கள் குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்பட்டது. அவர்களது அன்றாட செயல்பாடுகளிலும், சுபாவங்களிலும் மாற்றங்கள் உருவாகின. அதனால் குழந்தைகளை டே கேருக்கு அனுப்பவில்லை. எனது பெற்றோரும், எனது கணவரின் பெற்றோரும் மாறி மாறி வந்து குழந்தைகளை கவனித்துக்கொண்டார்கள். மாமனார்- மாமியார் ஒரு மாதம் வந்து தங்கியிருந்துவிட்டு சென்றதும், எனது பெற்றோர் வருவார்கள். பெரியவர்கள் வந்து குழந்தைகளை கவனிக்கத் தொடங்கியதும், குழந்தைகளிடம் நல்ல மாற்றம் உருவானது. அவர்களது குணாதிசயங்களும் மாறின. கூட்டுக் குடும்பத்தின் பெருமை இப்போதுதான் எனக்கு புரிகிறது'' என்கிறார். சர்வேயில் பங்குபெற்ற பெரும்பாலான தம்பதிகளின் கருத்து இதுபோல்தான் இருக்கிறது.

    குழந்தையில்லாத தம்பதிகளின் எண்ணிக்கை உயர்ந்திருப்பது சர்வேயில் தெரியவந்திருக்கிறது. 45.3 சதவீத தம்பதிகள், பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளால் தங்களுக்கு பல வருடங்கள் கழித்தே குழந்தை பிறந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இவர்களில் 40.2 சதவீத தம்பதிகளில் ஆண்- பெண் இருவருமே இனப்பெருக்கத்திறன் குறைபாடு கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பகுதியினர் அதற்கான நிபுணர்களிடம் குழந்தையின்மைக்கான சிகிச்சையும் பெற்றிருக்கிறார்கள்.

    குழந்தையின்மை சிகிச்சைக்கான செலவு உயர்ந்துவிட்டதாக சர்வேயில் பங்குபெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் குறைபட்டிருக்கிறார்கள். 56.6 சதவீதம் பேர் ஒரு லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை செலவிட்டதாக குறிப்பிட்டிருக்கிறார்கள். 28 சதவீதம் பேர் 5 முதல்10 லட்சம் ரூபாய் வரை செலவிட்டுள்ளனர். 8.2 சதவீதத்தினர் 10 முதல் 15 லட்சம் ரூபாயும், 7.2 சதவீதத்தினர் 15 லட்சத்திற்கும் மேலாக செலவிட்டதாகவும் கூறியிருக்கிறார்கள்.

    குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் விஷயத்திலும் தென்னிந்தியர்களின் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. `திருமணம் முடிந்த 6 மாதம் வரை தாய்மையை பற்றி சிந்திப்பதே இல்லை' என்பது அவர்களது கருத்தாக இருக்கிறது. 24.3 சதவீத இளந்தாய்மார்கள் `தங்கள் பொருளாதார நிலை மேம்பட்ட பின்பே குழந்தை பெற்றுக்கொள்ள தீர்மானித்திருப்பதால், தற்போதைக்கு தாய்மையை தள்ளிவைத்திருக்கிறோம்' என்று கூறியிருக்கிறார்கள்.

    இந்த சர்வேயில் இடம்பெற்றிருப்பவர்களில் 49.9 சதவீதத்தினர் ஒரு குழந்தையே போதும் என்ற கருத்தை பதிவுசெய்துள்ளனர். 39.2 சதவீதத்தினர் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறார்கள். 8.8 சதவீதத்தினர் மூன்று குழந்தைகளின் தாய்மார்கள். 2.1 சதவீதத்தினர் மூன்று குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுத்திருக்கிறார்கள்.

    ஒரு குழந்தையோடு நிறுத்திக்கொண்ட தாய்மார்களிடம், `இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்வீர்களா?' என்று கேட்டபோது, 29.9 சதவீதத்தினர் `பெற்றுக்கொள்ளமாட்டோம்' என்று கூறியிருக்கிறார்கள். `குழந்தைகளே பெற்றுக்கொள்ளமாட்டோம்' என்றும் 3.9 சதவீதம் தம்பதிகள் கூறியிருப்பது இதில் கவனிக்கத்தகுந்த விஷயம்.

    செல்போன் குடும்பத்தினரை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது என்பது சர்வேயில் தெரியவந்திருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதன் தாக்கத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள். வெளியே சென்று விட்டு வீட்டிற்குள் நுழைந்ததும் 59 சதவீதம் பேர் ஒரு மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை செல்போனில் செலவிடுகிறார்கள். 24.6 சதவீதம் பேர் நான்கு மணி நேரத்திற்கு மேல் செல்போனே கதி என்று கிடக்கிறார்கள். ஒரு மணி நேரத்திற்குள் செல்போன் பயன்பாட்டை குறைத்துக்கொள்கிறவர்கள் 16.4 சதவீதம்தான்.

    வீட்டில் பல்வேறு விதமான பிரச்சினைகள் எழுவதற்கு 63.9 சதவீதம் அளவுக்கு செல்போன்கள்தான் காரணமாக இருக்கின்றன என்று சர்வேயில் பங்குபெற்றவர்கள் கருத்து பகிர்ந்திருக்கிறார்கள். `அதிகமான நேரம் செல்போனை உபயோகிக்கிறார்கள்' என்பதும், `செல்போனில் பொழுதைக் கழிக்கும்போது பூமி அதிர்ச்சி வந்தால்கூட அவர்களுக்கு தெரிவதில்லை. அந்த அளவுக்கு அதில் ஆழ்ந்து போய்விடுகிறார்கள்' என்பதும் அவர்கள் மீது வீசப்படும் குற்றச்சாட்டாக இருக்கிறது.

    வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்துவது குடும்பத்தினரிடம் அன்பையும், நெருக்கத்தையும் உருவாக்கும். அதனால் அதை கடைப்பிடிக்கவேண்டும் என்பது பெரும்பாலான குடும்பத்தினரின் ஆசையாக இருக்கிறது. ஆனால் அந்த ஆசையை தற்போது 18.5 சதவீதம் வீடுகளில் உள்ளவர்கள்தான் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கான நேரம் கிடைப்பதில்லை என்பது 48 சதவீத குடும்பத்தினரின் ஆதங்கமாக இருக்கிறது. 33.5 சதவீத குடும்பத்தினர் எப்படியாவது, எப்போதாவது அதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள்.

    அதே நேரத்தில் வெளியே ஓட்டலில் போய் உணவருந்தும் ஆசை ரொம்பவும் அதிகரித்திருக்கிறது. 55 சதவீதம் பேர் மாதத்தில் மூன்று தடவை குடும்பத்தோடு வெளியே சென்று உணவருந்துகிறார்கள். 9 சதவீதத்தினர் மாதந்தோறும் 6 தடவைக்கு மேல் வெளி உணவை சுவைக்கிறார்கள். அதனால்தான் தெருவெங்கும் ஓட்டல்கள் திறந்தபடி இருக்கின்றன. ஆனால் மக்களோ ஒரே ஓட்டலிலே நிரந்தரமாக சாப்பிடுவதில்லை.

    பெங்களூருவை சேர்ந்த தீபா சொல்கிறார்...

    ''வாரத்தில் ஒரு நாள் குடும்பத்தினரோடு வெளியே சென்று சாப்பிடுவோம். நிரந்தரமாக ஒரே ஓட்டலில் சாப்பிடுவதில்லை. நண்பர்கள் எந்த ஓட்டல் பற்றி நல்ல கருத்து சொல்கிறார்களோ அங்கு செல்வோம். சில ஓட்டல்கள் சிறியதாக இருந்தாலும் அங்கு ஹோம்லி பீல் கிடைக்கும். நம் முன்னாலே சமைத்து தரும் ஓட்டல்களும் இருக்கின்றன. சில இடங்களில் கியூவில் நின்று இடம் பிடித்து சாப்பிடவேண்டியதிருக்கும். ஆனாலும் ருசியாக இருந்தால், அங்கும் செல்லத்தான் செய்கிறோம்.

    குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து வீட்டில் சாப்பிட வாய்ப்பு குறையும்போது, வெளியே சென்று சாப்பிட்டு அந்த குறையை தீர்த்துக்கொள்கிறோம். ஓட்டலில் சாப்பிடும்போது செல்போனை துழாவிக்கொண்டிருப்பதற்கெல்லாம் இடம்கொடுக்க மாட்டோம்" என்கிறார்.

    எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலம் உழைக்கவேண்டும் என்பது முந்தைய தலைமுறையின் கருத்தாக இருந்தது. இளைய தலைமுறையினரோ ஜாலியாக வாழவேண்டும் என்ற ஆசையுடன் இருக்கிறார்கள். அதனால் சர்வேயில் பங்கேற்றவர்கள், "ஐம்பது வயதிலே வேலையில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு மகிழ்ச்சியாக ஓய்வு வாழ்க்கை வாழவேண்டும்" என்கிறார்கள். 60 சதவீதத்தினரின் கருத்து இவ்வாறாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    "70 சதவீத வேலைவாய்ப்புகள் இப்போது பேங்கிங், இன்சூரன்ஸ் போன்ற துறைகளை சார்ந்தே இருக்கின்றன. அவர்களிடம் டார்கெட்டை எப்பாடுபட்டாவது அடையவேண்டும் என்ற வேகம் உள்ளது. அதற்காக பரபரப்பான உழைப்பில் அவர்கள் இளம்வயதிலேயே களைத்துப்போகிறார்கள். வயது ஏறும்போது அவர்களுக்கு பதவி உயர்வு கிடைத்தாலும், அதற்கு ஏற்றபடி பணிச்சுமையும் அதிகரித்துக்கொண்டே இருக்கும். அதனால்தான் ஐம்பது வயதிலேயே அவர்கள் வேலையை விட்டுவிட்டு அமைதியாக வாழ ஆசைப்படுகிறார்கள்'' என்கிறார் நிதித்துறை ஆலோசகர் பிரமோத் சின்கா.

    எப்படியோ காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள் மனித வாழ்க்கையில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அத்தகைய மாற்றங்களை இதுபோன்ற கருத்துக்கணிப்புகள் வெளிப்படுத்துகின்றன.

    Next Story
    ×