என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    உறவுக்குள் நெருக்கத்தை அதிகப்படுத்தும் அம்சங்கள்
    X

    உறவுக்குள் நெருக்கத்தை அதிகப்படுத்தும் அம்சங்கள்

    • சிறந்த தகவல் தொடர்பு திறன்தான் உறவுக்குள் நெருக்கத்தை பேணுவதற்கு அடிப்படையானது.
    • தம்பதியரை பொறுத்தவரை ஒரே கனவுகள், இலக்குகள் கொண்டு செயல்படுதல் உறவை வளர்க்கும்.

    குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள், இளம் தம்பதியர்கள், நட்பாக பழகி குடும்ப இன்ப, துன்பங்களில் பங்கெடுக்கும் அளவுக்கு உரிமை கொண்டிருப்பவர்கள் என உறவு வட்டத்துக்குள் இருப்பவர்களுக்குள் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் மனஸ்தாபம் ஏற்படலாம். அது உறவுக்குள் விரிசலை உண்டாக்குவதற்கு வித்திடலாம். அதற்கு இடம் கொடுக்காமல் ஆரம்ப நிலையிலேயே முற்றுப்புள்ளிவைத்து, உறவுக்குள் நெருக்கத்தை அதிகரிக்க செய்வதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி பார்ப்போம்.

    உடல் ரீதியான அன்பு

    தம்பதியரை பொறுத்தவரை நெருக்கம் என்பது உடல் தொடுதலால் மட்டுமே நிர்ணயிக்கப்படாது. அன்பான தொடுதல், அரவணைப்பு, கைகளை பற்றி ஆதரவு அளித்தல், அருகில் அமருதல், ஆறுதலாக பேசுதல் போன்றவை உறவை நெருக்கமாக வைத்திருக்க உதவிடும். மற்ற உறவுகளை பொறுத்தவரை அடிக்கடி உரையாடுவது, அன்பை வெளிப்படுத்துவது உறவை வலுப்படுத்தும்.

    திறந்த மனம்

    தம்பதியரில் ஒருவருக்கொருவர் உணர்வுகளை பகிர்வதற்கு சிரமப்பட்டாலோ, குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களிடம் ஏதேனும் முக்கியமான விஷயத்தை கூட பகிர்வதற்கு தயக்கம் கொண்டாலோ உறவுக்குள் நெருக்கம் குறையும்.

    தம்பதியரை பொறுத்தவரை தங்களின் ஆசைகள், கடந்த கால அனுபவங்களை பகிர்ந்து கொள்ள பாதுகாப்பான சூழல் இருந்தால்தான் உண்மையான நெருக்கம் உண்டாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அந்த சூழலை உருவாக்குவதற்கு திறந்த மனதுடன் பேச வேண்டும். தம்பதியர் மட்டுமல்ல மற்ற உறவுகளும் திறந்த மனதுடன் செயல்பட்டால்தான் உறவுக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.

    தகவல் தொடர்பு

    சிறந்த தகவல் தொடர்பு திறன்தான் உறவுக்குள் நெருக்கத்தை பேணுவதற்கு அடிப்படையானது. அதற்காக எப்போதும் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதல்ல. நீண்ட நாட்கள் பேசாமல், தொடர்பு கொள்ளாமல் இருப்பதுதான் தவறானது. குடும்பத்தினரை தவிர உறவினர்களுடன் நிலையான தகவல் தொடர்பை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    வெளியூரில் வசிப்பவர்களாக இருந்தால் வாரம் ஒருமுறையோ முடியாதபட்சத்தில் மாதம் ஒருமுறையாவது அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசி நலம் விசாரிக்கும் பண்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். யார் முதலில் பேசுவது என்ற ஈகோவுக்கு இடம் கொடுக்கக்கூடாது. முதல் அடியை எடுத்து வைப்பது நீங்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் உறவுக்குள் நெருக்கம் மேம்படும்.

    பரஸ்பர மரியாதை

    நம்மை மதிக்கிறார்கள், நம் பேச்சுக்கு உரிய மரியாதை கொடுக்கிறார்கள் என்ற உணர்வே உறவை வலுப்படுத்தும். உறவுக்குள் யாரேனும் உங்களுக்கு சின்ன உதவி செய்தாலும் கூட தவறாமல் 'நன்றி' கூற மறக்காதீர்கள். என்றென்றும் நன்றிக்கடன் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

    எந்த விஷயமாக இருந்தாலும், அவர்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் பட்சத்தில் 'நீங்கள் சிறப்பாக செயல்படுகிறீர்கள்', 'உங்கள் யோசனை எனக்கு பிடிக்கும்' என்பன போன்ற சிறிய பாராட்டுகள் கூட உறவுக்குள் நெருக்கத்தை அதிகரிக்கும்.

    ஒரே இலக்கு

    தம்பதியரை பொறுத்தவரை ஒரே கனவுகள், இலக்குகள் கொண்டு செயல்படுதல் உறவை வளர்க்கும். அதனை நோக்கி ஒருசேர திட்டமிட்டு செயல்பட வழிவகை செய்யும். உறவுக்குள் நெருக்கத்தை பலப்படுத்தும்.

    Next Story
    ×