
கஸ்தூரி மஞ்சள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதனை வாங்கி அத்துடன் கொஞ்சம் பச்சைப் பயறு சேர்த்து வெயிலில் உலர்த்தி மெஷினில் கொடுத்து நைசாக அரைத்து வைத்துக்கொண்டு தினமும் குளிக்கும்போதும், முகம் கழுவும்போதும் முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து தேய்த்துக் குளிக்கவேண்டும்.
உடனடியாக முடி நீங்கி விடாது, தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மட்டுமே நாளடைவில் போகும். ஆனால், புதிதாக முடிகளை வளரவிடாது, சந்தையில் கிடைக்கும் ஹேர் ரிமூவர் லோஷன்களைப் போட்டு, இந்த தேவையற்ற முடிகளைப் போக்கிய பின்னர், தினந்தோறும் விடாமல் கஸ்தூரி மஞ்சள் தூளை முகத்தில் பூசிக் குளித்து வந்தால், நல்ல வழுவழுப்பான முக அழகைப் பெறலாம்.
தோல் நோய்கள் தீர கஸ்தூரி மஞ்சள் தூளை வெந்நீரில் குழைத்து மேல் பூச்சாகப் பூசிவர வேண்டும் அல்லது கஸ்தூரி மஞ்சள், உலர்ந்த துளசி பவுடர் சம அளவாகச் சேர்த்து, அரைத்து, உடலில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து, வெந்நீரில் குளிக்க வேண்டும்.
நாட்டு மருந்து கடைகளில் கோரைக்கிழங்கு பொடி கிடைக்கும் அதனை வாங்கி வந்து கை, கால்களில் நீரில் கலந்து தேய்த்து வந்தால் தேவையற்ற முடிகள் நீங்கும். நாளடைவில் முடி வளர்ச்சி மட்டுப்படும்.