search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    ஆண்களுக்கு அதிகரிக்கும் மார்பக புற்றுநோய்
    X

    ஆண்களுக்கு அதிகரிக்கும் மார்பக புற்றுநோய்

    • மார்பகங்கள் பெரியதாக இருந்தால் அது புற்றுநோய்க்கான அறிகுறியாக அமையலாம்.
    • மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்களின் இறப்பு விகிதம் பெண்களை விட அதிகமாக உள்ளது.

    மார்பக புற்றுநோய் பெண்களுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும் என்று பலரும் நம்புகிறார்கள். ஆனால் ஆண்களும் பாதிப்புக்கு ஆளாகலாம். சமீபத்தில் புதுடெல்லியை சேர்ந்த 70 வயது முதியவருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் மார்பக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

    அதில் புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆண்களில் ஒரு சதவீதம் பேர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக மும்பையை சேர்ந்த பிரபல மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் அனில் ஹரூர் தெரிவித்துள்ளார். மார்பக புற்றுநோய் பாலினத்தை பொறுத்து பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

    ஆண், பெண் இரு பாலருமே சரியான நேரத்தில் மருத்துவ பரிசோதனை, நோய் தடுப்பு சிகிச்சைகளை மேற்கொள்வதன் மூலம் ஆரம்ப நிலையிலேயே தவிர்த்துவிடலாம் என்றும் அவர் கூறுகிறார். ''மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்களின் இறப்பு விகிதம் பெண்களை விட அதிகமாக உள்ளது. ஏனெனில் போதிய விழிப்புணர்வு இல்லாததால், புற்றுநோயை கண்டறிவதில் தாமதம் ஏற்படுகிறது. சமீப காலமாக ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது'' என்றும் குறிப்பிடுகிறார்.

    45 வயதுடைய ஆண் ஒருவர் மார்பக புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி அவதிப்பட்ட சம்பவத்தை நினைவு கூர்கிறார். ''அந்த நபருக்கு மார்பகம் பெரிதாகிக்கொண்டிருந்திருக்கிறது. ஆனால் வலி இல்லாமல் இருந்ததால் அதனை கவனத்தில் கொள்ளாமல் இருந்துவிட்டார். நாளடைவில் மார்பு பகுதியில் அசவுகரியத்தை உணர்ந்ததால் தாமதமாக மருத்துவ பரிசோதனைக்கு வந்தார். அவரது மார்பு பகுதியில் கட்டி இருப்பதை கண்டுபிடித்தோம். அது வெடிக்கும் தருவாயில் இருந்தது.

    உடனே கட்டியின் அளவைக் குறைக்க கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரது மார்பக திசு மற்றும் பாதிக்கப்பட்ட தசை பகுதி அகற்றப்பட்டது. ஆண்களுக்கு, மேமோகிராபி சிகிச்சை மேற்கொள்வது சவாலானது. எனவே, சோனோகிராபி மற்றும் பயாப்ஸி முறையில் சிகிச்சை அளித்து புற்றுநோயை கண்டறிந்தோம். துரதிருஷ்டவசமாக தாமதமாக மருத்துவ சிகிச்சையை நாடியதால் புற்றுநோய் பரவ தொடங்கி இருந்தது.

    ஆண்களுக்கு மார்பக திசுக்கள் குறைவாக இருப்பது புற்றுநோய் விரைவாக பரவுவதற்கு காரணமாகிவிடுகிறது. எனினும் அவரது தசைகளை மட்டுமே பாதித்தது. கல்லீரல், நுரையீரல், மூளை போன்ற முக்கிய உறுப்புகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதனால் புற்றுநோயின் தீவிர நிலையில் இருந்து அவரை காப்பாற்றிவிட்டோம்.

    ஆண்கள் இந்த விஷயத்தில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதற்கு வெட்கப்படவோ, தயங்கவோ கூடாது. குறிப்பாக மார்பகங்கள் பெரியதாக இருந்தால் அது புற்றுநோய்க்கான அறிகுறியாக அமையலாம். குடும்பத்தில் யாருக்கேனும் புற்றுநோய் இருந்திருந்தால் மற்றவர்கள் எளிதில் பாதிப்புக்கு ஆளாகக்கூடும். எனவே மார்பகத்தில் கட்டிகள், வீக்கம் போன்ற அறிகுறிகள் வெளிப்பட்டால் அசட்டையாக இருக்காமல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்'' என்கிறார்.

    Next Story
    ×